செயின்ட் லூசியா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2024 டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி ஒருவேளை தோல்வியடைந்தாலும் அதிக நெட் ரன் ரேட் வைத்திருந்தால் அரை இறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலை இருந்தது. இந்த சூழ்நிலையில் சிவம் துபே இந்த போட்டியில் நிறைய பந்துகளை வீணடித்தார். அது ஒரு வகையில் இந்திய அணியின் நெட் ரன் ரேட்டை பாதித்தது.
இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி 127 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே இணைந்து ஆடினர்.

சிவம் துபே தான் சந்தித்த முதல் பந்தில் ஒரு ஃபோர் அடித்த போதும் வழக்கம் போல அடுத்த சில பந்துகளை வீணடித்தார். மறுபுறம் சூர்யகுமார் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பின் ஹர்திக் பாண்டியா வந்தார். நீண்ட நேரம் சிங்கிள் ரன்கள் எடுத்துக் கொண்டிருந்த சிவம் துபே கூடுதலாக ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தார். இதை அடுத்து அவர் 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
கடைசி ஓவர்களில் பேட்டிங் ஆடிய சிவம் துபே பந்துகளை வீணடித்தது விமர்சனத்தை கிளப்பி உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 127 என்ற போதும், இது போன்ற பேட்டிங் பிட்ச்சுகளில் கடைசியாக இறங்கும் பேட்ஸ்மேன்களின் ஸ்ட்ரைக் ரேட் குறைந்தது 150 ஐ தாண்டியாவது இருக்க வேண்டும் என ரசிகர்கள் அவரை விளாசினர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 20 ஊர்களில் 205 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் ஓவரில் முதல் விக்கெட்டை இழந்த போதும் அதன் பின் அதிரடி ஆட்டம் ஆடியது. ட்ராவிஸ் ஹெட் அதிரடியாக அரை சதம் அடித்து இந்திய அணியை கடுமமையாக அச்சுறுத்தினார். இந்த நிலையில் சிவம் துபேவின் நிதான ஆட்டம் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படுத்தியிருக்கிறது.