விசாகப்பட்டினம் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆடிய இளம் இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய வீரர் மீதான தன் கோபத்தை காட்ட வேண்டி, தொடர்ந்து பவுண்டரி அடிக்க முயற்சி செய்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 208 ரன்கள் குவித்தது. அடுத்து இந்தியாவால் இத்தனை பெரிய ஸ்கோரை சமாளிக்க முடியுமா என நினைத்த போது சிறப்பான துவக்கம் அளித்தார் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்.
முதல் ஓவரில் முதல் மூன்று பந்துகளில் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து மிரட்டினார் ஜெய்ஸ்வால். ஆனால், அதே ஓவரில் ருதுராஜ் கெயிக்வாட் ரன் அவுட் ஆகவும் அவரே காரணமாக இருந்தார். ருதுராஜை இரண்டாவது ரன் ஓட அழைத்து, பின் வேண்டாம் என அவர் கூறியதால், ருதுராஜ் கெயிக்வாட் பாதி தூரம் ஓடி வந்து திரும்ப முடியாமல் ரன் அவுட் ஆனார்.

அப்போது ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் வேறு சக வீரரை ரன் அவுட் செய்ததை சுட்டிக் காட்டி கீழ்த்தரமாக ஜெய்ஸ்வாலை கிண்டல் செய்யும் விதமாக சிரித்து வெறுப்பேற்றினார். அதனால், கோபத்தில் இருந்தார் ஜெய்ஸ்வால்.
அதனால், மீண்டும் மூன்றாவது ஓவரில் முதல் பந்தில் ஃபோர் அடித்தார். அடுத்து இரண்டாவது பந்தில் சிக்ஸ் அடித்தார். அப்போதே அவர் பவுண்டரி அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அடிப்பது வெளிப்படையாக தெரிந்தது. அதனால், மூன்றாவது ஓவரை வீசிய மேத்யூ ஷார்ட் மூன்றாவது பந்திலும் ஜெய்ஸ்வால் பவுண்டரி தான் அடிக்கப் போகிறார் என்பதை அவரது உடல் மொழியிலேயே தெரிந்து கொண்டு அவுட்சைடு ஆஃப் திசையில் ஃபுல் லென்த்தில் வீசினார். அவர் நினைத்தது போலவே பந்தை தூக்கி அடித்தார் ஜெய்ஸ்வால். பந்து கேட்ச் ஆனது.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மாவும் இதே போலவே இன்னிங்க்ஸின் பத்தாவது ஓவரில் பவுண்டரி அடித்தே ஆக வேண்டும் என ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்த பின்னரும் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதே போலவே, செய்து ஜெய்ஸ்வால் அவுட் ஆனார்.
ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியா மீதான தன் கோபத்தை காட்ட அடித்து ஆடி அவுட் ஆகி இருக்கிறார். அவர் ரோஹித் சர்மா போல 10,000 ரன்கள் அடித்த வீரர் அல்ல. இப்போது தான் சர்வதேச கிரிக்கெட்டில் அடி எடுத்து வைத்து இருக்கிறார். மீண்டும், இதே போல அவர் அடிக்கடி செய்தால் அவருக்கு அணியில் இடம் கிடைக்காது என்பதே உண்மை.
ஜெய்ஸ்வால் இந்தப் போட்டியில் 8 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தது நிச்சயம் டி20 போட்டியில் சிறப்பான விஷயம். இந்தியாவின் வெற்றியில் அவருக்கும் பங்கு உள்ளது. ஆனாலும், அவர் தன் உணர்ச்சிகளை போட்டிகளில் கட்டுப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியா 208 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து ஆடிய இந்தியா கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டியது. ரிங்கு சிங் கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸ் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.