சிட்னி: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக களமிறங்கிய சாய் சுதர்சன் சதம் விளாசி அசத்தியுள்ளார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற பின், அவரின் இடத்திற்கு சாய் சுதர்சன் கொண்டு வரப்பட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
தினேஷ் கார்த்திக், முரளி விஜய், அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், நடராஜன் வரிசையில் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடப் போகும் அடுத்த தமிழ்நாடு வீரராக சாய் சுதர்சன் உருவாகி வருகிறார். ஏற்கனவே இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சாய் சுதர்சன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் அவரின் திறமையை வெளிப்படுத்த தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இருந்தாலும் கவுண்டி கிரிக்கெட் மற்றும் இந்தியா ஏ அணியில் தொடர்ந்து விளையாடி வரும் சாய் சுதர்சன், மிகச்சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். அந்த வகையில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியா ஏ அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் 2வது நாள் முடிவில் இந்தியா ஏ அணி 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.
120 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், சாய் சுதர்சன் 96 ரன்களுடனும், தேவ்தத் படிக்கல் 80 ரன்களுடனும் 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் சதம் விளாசி அசத்தினார். பின்னர் 200 பந்துகளில் 9 பவுண்டரிகள் உட்பட 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் தேவ்தத் படிக்கல் 88 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
இதன்பின் வந்த வீரர்களில் இஷான் கிஷன் 32 ரன்களும், நிதீஷ் குமார் ரெட்டி 17 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக இந்தியா ஏ அணி 2வது இன்னிங்ஸில் 312 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் ஆஸ்திரேலியா ஏ அணியின் வெற்றிக்கு 225 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் சாய் சுதர்சன் சதம் விளாசி இருப்பது ரசிகர்கள் மட்டுமல்லாமல் தேர்வு குழுவினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஏனென்றால் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் அவரது இடத்திற்கு வருவதற்கு அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் போட்டியில் உள்ளனர். தற்போது அந்தப் போட்டியில் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சனும் இணைந்துள்ளார்.