அடிலெய்டு: இந்திய டெஸ்ட் அணி தான் ஆடிய கடைசி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து இருக்கிறது. இந்த தோல்விகள் இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. ஆனாலும், கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் அதை ஒப்புக் கொண்டு, சரி செய்ய முயற்சிக்கவில்லை.
இது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். ஜெய்ஸ்வால் சில போட்டிகளில் சதம் அடித்தாலும் பலமுறை ஒற்றை இலக்கத்திலோ அல்லது அரை சதம் அடிக்கும் முன்பு ஆட்டம் இழந்து விடுகிறார்.

விராட் கோலி ஆஃப் சைடு செல்லும் பந்தை அடிக்க முயன்று தனது விக்கெட்டை பறி கொடுப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறார். மேலும் சுழற் பந்துவீச்சிலும் அவர் தடுமாறி வருகிறார். ரோஹித் சர்மா அதிரடியாக ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார். இப்படி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறை உள்ளது.
இந்திய அணி ஆடிய கடைசி ஐந்து போட்டிகளிலும் முதல் இன்னிங்ஸில் படுமோசமான விக்கெட் வீழ்ச்சிகளை சந்தித்து உள்ளது. ஆனால், அதை சரி செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. எந்த பேட்ஸ்மேனும் தனது பேட்டிங் முறையை மாற்றிக் கொள்ளவில்லை.
இது பற்றி பேசிய ஆகாஷ் சோப்ரா, "இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் கடைசி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அந்த இரண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆகும். முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்களால் சரியாக விளையாட முடியவில்லை. சவாலான சூழ்நிலைகளில் இந்திய பேட்டிங் சரிவை சந்தித்து வருகிறது." என்றார்.
மேலும், "கடைசி ஐந்து போட்டிகளில் எட்டு முறை இந்திய அணியின் பேட்டிங் தோல்வி அடைந்து உள்ளது. அதில் ஐந்து முதல் இன்னிங்ஸ் தோல்வி ஆகும். முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டிங் பலவீனம் வெட்ட வெளிச்சமாகி விடுகிறது. இந்திய பேட்டிங் முன்னேற வேண்டும் என்றால் முதலில் இங்கு பிரச்சனை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்." என்றார்,
"என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை என்றால் எதை நீங்கள் முன்னேற்றுவீர்கள்? இந்திய அணியின் பேட்டிங்கில் நிச்சயம் பிரச்சனை உள்ளது. இந்திய அணி நன்றாக ஆடி ரன் குவித்த இரண்டு இன்னிங்ஸ்களிலும் பேட்டிங் செய்ய சாதகமான சூழ்நிலை இருந்தது. அதனால் தான் அப்போதும் ரன் குவிக்க முடிந்தது" என்றார் ஆகாஷ் சோப்ரா.