மெல்போர்ன்: இந்திய வீரர்கள் சரியாக பயிற்சி செய்யக்கூடாது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மெல்போர்னில் நடக்க உள்ள அடுத்த டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சை சமாளிக்கும் வகையில் இந்திய அணி பயிற்சி செய்யக்கூடாது என திட்டமிட்டு ஒரு பித்தலாட்ட வேலையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு செய்து உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
வலைப்பயிற்சியில் இந்திய வீரர்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் பிட்ச்-சுக்கும், ஆஸ்திரேலிய அணிக்கு அளிக்கப்பட்டு இருக்கும் பிட்ச்-சுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதே இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணம்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இந்திய அணி ஒரு வெற்றி, தோல்வி மற்றும் ஒரு டிரா செய்துள்ளது. இந்த நிலையில், நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் வென்றால் மட்டுமே இந்த தொடரை கைப்பற்ற முடியும், 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது இந்திய அணி.
இந்த நிலையில் மெல்போர்னில் நடக்க உள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. மெல்போர்னில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிக்கு பயிற்சி செய்வதற்கான பிட்ச்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. அதில் தான் சர்ச்சை எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு வலைப்பயிற்சியில் புதிய பிட்ச் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், இந்திய அணிக்கு அளிக்கப்பட்டு இருக்கும் பயிற்சி பிட்ச் பழையதாக உள்ளது. ஏற்கனவே, சிலர் அந்த பிட்ச்சை பயன்படுத்தி உள்ளனர். இதில் என்ன வித்தியாசம் என்றால், புதிய பிட்ச்சில் பந்து பவுன்ஸ் ஆகும். ஆனால், பழைய பிட்ச்சில் பந்து அதிகமாக பவுன்ஸ் ஆகாது. மெல்போர்னில் நடக்க உள்ள டெஸ்ட் போட்டியில் புதிய பிட்ச்சில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகி மேலே வரும்.
இந்திய பேட்ஸ்மேன்கள் பவுன்ஸ் ஆகும் பந்துகளை சந்திப்பதற்கு சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், அதற்கான பயிற்சியை மேற்கொள்வது அவசியம். ஆனால், அதை சரியாக செய்ய முடியாத அளவுக்கு ஒரு பழைய பிட்ச்சை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு அளித்திருக்கிறது. வேண்டுமென்றே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு இவ்வாறு செய்ததா? அல்லது தவறுதலாக இந்திய அணிக்கு பழைய பிட்ச் அளிக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.