சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இந்திய அணி 1 - 2 என இழந்தது. இந்த தொடரில் இந்திய அணி மோசமாக செயல்பட்டது. அது பற்றி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசி இருக்கிறார். இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன என்பதை அவர் எளிமையாக விளக்கி இருக்கிறார்.
இந்த தொடரில் இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா மட்டுமே சிறப்பாக செயல்பட்டு அனைத்து போட்டிகளிலும் விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெற வைக்க முயற்சி செய்தார். பேட்ஸ்மேன்கள் படுமோசமாக செயல்பட்டனர்.

மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் சொற்ப ரன்களே எடுத்தனர். விராட் கோலி ஒரு சதம் அடித்த போதும் 8 இன்னிங்ஸ்களில் 90 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன? என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி விளக்கி இருக்கிறார்.
இந்த தொடரில் இந்திய அணி 10 இன்னிங்ஸ்களில் மூன்று முறை மட்டுமே 200 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை எடுத்தது. இதுதான் இந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைய முக்கிய காரணம் என கங்குலி சுட்டிக்காட்டி இருக்கிறார். 350 - 400 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என கூறி இருக்கிறார்.
இது பற்றி கங்குலி பேசுகையில், "நாம் சரியாக பேட்டிங் செய்யவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களால் டெஸ்ட் போட்டிகளை வெல்ல முடியாது. 170, 180 ரன்களை அடித்து விட்டு டெஸ்ட் போட்டிகளை வெல்ல முடியாது. நீங்கள் 350 முதல் 400 ரன்கள் வரை எடுக்க வேண்டும். அப்போதுதான் டெஸ்ட் போட்டிகளை வெல்ல முடியும்." என சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
மேலும், "இந்திய அணியில் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்ல முடியாது. அனைவருமே ரன் குவித்து இருக்க வேண்டும்." என்றார் சவுரவ் கங்குலி. இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இந்த தொடரில் படுமோசமாக செயல்பட்டனர்.
விராட் கோலி 8 இன்னிங்ஸ்களில் அவுட் சைடு ஆஃப் பக்கம் வந்த பந்தை அடிக்க முயன்று, பந்தை எட்ஜ் செய்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். எட்டு முறையும் ஒரே தவறை மீண்டும், மீண்டும் செய்தார். மறுபுறம் ரோஹித் சர்மா ஒரு போட்டியில் கூட 10 ரன்களை தாண்டி ரன் சேர்க்கவில்லை.