மும்பை: இந்திய அணி மீது எந்த அழுத்தமும் இல்லாத போது, தாங்களாகவே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்று கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை அடுத்த உலகக்கோப்பைக்கு எடுக்கவில்லை என்றால், இந்திய அணி மாற்று திட்டங்களை தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் 2வது ஒருநாள் போட்டியில் நாளை அடிலெய்டு மைதானத்தில் விளையாட உள்ளது. இதற்காக இரு அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் மற்றும் மற்ற சிக்கல்கள் தொடர்பாக அஸ்வின் பேசியுள்ளார். அதில் அஸ்வின் பேசுகையில், 2027 உலகக்கோப்பை தொடருக்கான தயாரிப்பாக இந்த தொடரை இந்திய அணி அணுக வேண்டும். அதனால் இந்த ஒருநாள் தொடரை இந்திய வீரர்களின் திறமையை கூர்மைப்படுத்தவும், சில பரிசோதனை முயற்சிகளையும் செய்யலாம்.
இந்திய அணி மீது எந்தவித அழுத்தமும் கிடையாது. ஆனால் நாமே அழுத்தத்தை உருவாக்கி கொள்கிறோம். அடுத்த ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ளது. அதனால் 2 வேகப்பந்துவீச்சாளர்கள் பயணிக்கப் போவது உறுதியான ஒன்று. அப்படி பார்த்தால், பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் கட்டாயம் இடம்பெறுவார்கள்.
3வது வேகப்பந்துவீச்சாளர் யார் என்ற கேள்விக்கு, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஹர்சித் ராணா ஆகியோருக்கு இடையில் போட்டி இருக்கிறது. அதேபோல் ஒரு ஸ்பின்னராக குல்தீப் யாதவ் இடம் உறுதி. மற்ற யாரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினால், அவர்களை கணக்கில் கொள்ள வேண்டும். அதேபோல் வருண் சக்கரவர்த்தியை ஒரு வாய்ப்பாக பார்க்கலாம்.
அதேபோல் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 2027 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார்களா என்பதை பார்க்க வேண்டும். ஒருவேளை அவர்கள் விளையாடவில்லை என்றால், இருதரப்பு தொடர்களை பரிசோதனை முயற்சியாக பார்க்க வேண்டும். குறிப்பாக வீரர்களின் திறனை வளர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.