பெர்த்: உலகின் எந்த மைதானத்திலும், எந்த பிட்சிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நிரூபித்துவிட்டதாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் மைக்கில் ஹசி பாராட்டியுள்ளார். அவரை ஆஸ்திரேலியாவில் பார்க்க ஆவலாக இருந்ததாக கூறிய அவர், மிகச்சிறந்த இன்னிங்ஸை ஆடி இருப்பதாக கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகள் பலரையும் ஈர்த்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டான போதும், இந்திய அணி மனம் தளராமல் பவுலிங் செய்து ஆஸ்திரேலியா அணியை 104 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அதுமட்டுமல்லாமல் 2வது நாள் முழுக்க ஒரு விக்கெட் கூட கொடுக்காமல் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பேட்டிங் செய்து அசத்தியுள்ளனர்.

அதிலும் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான ஜெய்ஸ்வால், 2வது இன்னிங்ஸில் கொஞ்சம் கூட அசராமல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் பவுலிங்கில் அட்டாக்கிங் ஷாட்ஸை விளையாடியது ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களையும் வியக்க வைத்துள்ளது. சிறப்பாக ஆடியுள்ள அவர் 193 பந்துகளில் 2 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 90 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலியா ஜாம்பவான் கில்கிறிஸ்ட் பேசுகையில், ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தை இதற்கு முன்பாக பார்த்த அனைவருக்கும் அவர் அட்டாக்கிங் கிரிக்கெட்டர் என்பது தெரியும். ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் இந்திய மண்ணில் ஆடிய டெஸ்ட் போட்டிகளிலும் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி இருக்கிறார். அதேபோல் குறைந்த இன்னிங்ஸ்களிலேயே அதிகளவிலான சிக்சர்களை விளாசி இருக்கிறார்.
இந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கும் முயற்சி அபரிவிதமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த இன்னிங்ஸ் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார். தொடர்ந்து மைக்கில் ஹசி பேசுகையில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஆஸ்திரேலியா மண்ணில் பார்ப்பதற்காக ஆவலாக இருந்தேன்.
ஏனென்றால் பவுன்ஸ் பிட்சில் எப்படி செயல்படுவார், சூழலை எப்படி கையாள்வார் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இன்றைய இன்னிங்ஸ் மூலமாக அவரால் எந்த சூழலிலும் ந்த பிட்சிலும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை நிரூபித்துவிட்டதாக பாராட்டியுள்ளார். தொடர்ந்து ஆஸ்திரேலியா முன்னாள் பயிற்சியாளர் டேரன் லேமன் பேசுகையில், ஆஸ்திரேலியா அணிக்கு இது கடினமான நாளாக அமைந்துள்ளது.
ஆனால் இந்திய அணியின் இரு பேட்ஸ்மேன்களுக்கும் தலை வணங்குகிறேன். கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் இன்று மிகச்சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் வெற்றிக்கான பயணத்தை தொடங்கும் இடத்திற்கு இந்திய அணியை அழைத்து வந்துவிட்டனர். இந்தப் போட்டியில் இந்திய அணியின் கைகள் ஓங்கியுள்ளது. இந்த பிட்சில் உதவி குறைந்துவிட்டது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் பவுலர்கள் சோர்வுடன் பவுலிங் செய்தனர். ஏனென்றால் சுமார் 2 மணி பேட்டிங் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.