மும்பை : இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட இருக்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெற இருக்கிறது.
இந்திய அணி கடைசியாக இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்திருக்கிறது. இந்த சூழலில் ஹாட்ரிக் டெஸ்ட் தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணிலே இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பதால் தற்போது இந்திய அணி மீது நம்பிக்கை இல்லாமல் ரசிகர்கள் உள்ளனர். இந்த சூழலில் கடந்த முறை ஆஸ்திரேலியா அணியில் கேப்டனாக இருந்த டிம் பெயின், இந்திய வீரர்களுடன் வாய் பேசி வம்பு இழுத்தார்
அதில் குறிப்பாக நாங்கள் தோல்வியே தழுவாத காபா மைதானத்திற்கு வாருங்கள்! உங்களை நாங்கள் அங்கு பார்த்துக் கொள்கிறோம் என்பது போல் டிம் பெயின் பேசினார். ஆனால் அதே காபா மைதானத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது. இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள டிம் பெயின், அஸ்வின் தான் தங்களை வெறுப்பேற்றியதாகவும் அவர் தான் தங்களிடம் முதலில் சண்டை செய்ததாகவும் கூறியிருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அஸ்வின் பிரிஸ்பேன் காபா டெஸ்டில் விளையாடவில்லை என நினைக்கின்றேன். நான் மற்ற இந்திய வீரர்களுடன் அவ்வளவாக பேசவில்லை. ஆனால் அஸ்வினிடம் நான் பேசியது உண்மைதான். காபாவில் உங்களை சந்திக்க ஆவலுடன் இருக்கின்றேன் என்று நான் கூறினேன்.
ஏனென்றால் அஸ்வின் எங்களை ஆரம்பத்தில் இருந்தே வெறுப்பேற்றினார். அதுதான் உண்மை. அஸ்வின் ஒரு பிரமாதமான கிரிக்கெட் வீரர். அஸ்வின் என்னைத் தொடர்ந்து ஆட்டமிழக்க செய்தார். அது எனக்கு வெறுப்பை கொடுத்தது. இதனால் தான் நான் அஸ்வினை பார்த்து அவ்வாறு கூறினேன். ஆனால் கடைசி நிமிடத்தில் தசைப்பிடிப்பு காரணமாக காபா டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடவில்லை.
ஆனால் அந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு அஸ்வின் மைதானத்தில் ஓடிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். என்னிடம் காபா டெஸ்ட் போட்டியில் நானும் சரியாக விளையாடவில்லை என்பதுதான் உண்மை என்று டிம் பெயின் கூறினார். டிம் பெயின் காபாவுக்கு வாருங்கள் என்று கூறிய போது அஸ்வின் அதற்கு நீ இந்தியாவில் விளையாட வந்தால் அதுதான் உனக்கு கடைசி தொடராக இருக்கும் என்று பதில் அளித்தார்.