கவுஹாத்தி : இந்திய அணிக்கு எதிரான தோல்வி பயத்தால் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டியை வென்று கொடுத்த அதிரடி பேட்ஸ்மேன் ட்ராவிஸ் ஹெட்டை மூன்றாவது டி20 போட்டியில் களமிறக்கியது.
எதிர்பார்த்தது போலவே ட்ராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டம் ஆடி 18 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கும் அவர் அளித்த அதிரடி துவக்கம் காரணமாக இருந்தது.
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தால் டி20 தொடரை இழக்கும் என்பதால் ஆஸ்திரேலியா எப்படியாவது மூன்றாவது டி20 போட்டியை வெல்ல வேண்டும் என்ற பதற்றத்தில் இருந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளையும் இந்தியா வென்றது. முதல் போட்டியில் 209 ரன்களை சேஸிங் செய்த இந்திய அணி கடைசி பந்தில் போட்டியை வென்றது. அடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 235 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த நிலையில் தான் மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ட்ராவிஸ் ஹெட்டை களமிறக்கியது. உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்து இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தவர் என்பதால் ட்ராவிஸ் ஹெட் அதே மனநிலையுடன் ஒரு அதிரடி இன்னிங்க்ஸ் ஆடினால் கூட இந்திய அணியை வீழ்த்தி விடலாம் என கணக்கு போட்டே ஆஸ்திரேலியா அவரை ஆட வைத்தது.
இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 222 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு 18 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். அடுத்து விக்கெட்கள் வீழ்ந்தாலும் கிளென் மேக்ஸ்வெல் சதம் அடித்து கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில் ஃபோர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ட்ராவிஸ் ஹெட் வெற்றி தேடிக் கொடுக்காவிட்டாலும் அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார்.