பிரிஸ்பேன் : இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது ஒரு வில்லன் இருக்கிறார் என்றால் அது ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் தான். இந்தியாவுக்கு எதிரான பல முக்கிய ஆட்டங்களில் தனி ஆளாக நின்று போட்டியை தலைகீழாக மாற்றி விடுகிறார். ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலக கோப்பை, பார்டர் கவாஸ்கர் தொடர் என ஹெட் இந்தியாவுக்கு எதிராக பல முக்கிய இன்னிங்ஸ்களை ஆடி அசத்தியிருக்கிறார்.
இதில் டி20 உலக கோப்பையில் மட்டும்தான் இந்தியா வெற்றி பெற்றது.மற்ற அனைத்திலும் ஆஸ்திரேலியா தான் வென்றது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக மட்டும் சிறப்பாக விளையாடுவது ஏன் என்று டிராவிஸ் ஹெட்டிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த டிராவிஸ் ஹெட், நாங்கள் இந்தியாவுக்கு எதிராக அதிக முறை விளையாடுகிறோம். அவர்களுடைய பந்துவீச்சை நான் அடிக்கடி பார்க்கின்றேன். இந்தியா எப்போதும் கடும் சவால்களை அளிக்கும் அணியாக இருக்கிறது. அடிலெய்ட் மற்றும் பெர்தில் நன்றாக தான் விளையாடினேன் என நினைக்கிறேன். எனினும் எதுவுமே இங்கு உத்திரவாதம் கிடையாது.
பும்ரா பந்துவீச்சை நான் எதிர்கொண்ட போது எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவைப்பட்டது. நான் பொதுவாக நேர்மறையான எண்ணங்களுடன் களத்தில் நின்று விளையாடுவேன். இன்றைய ஆட்டத்தில் இறுதியில் நான் கொஞ்சம் சோர்வாக ஆகிவிட்டேன். இரண்டாவது புதிய பந்தை இந்திய வீரர்கள் சிறப்பாக பயன்படுத்தினார்கள்.
இன்றைய ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடியதற்கு காரணம் டாப் வரிசையில் இருந்த முதல் மூன்று வீரர்கள் தான். அவர்கள் புதிய பந்தை எதிர்கொண்டதன் மூலம் எங்களுக்கு ரன் அடிக்க ஏதுவான வாய்ப்பு ஏற்பட்டது. ரன்கள் அடிக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு இருந்தால், அதனை நிச்சயம் நான் பயன்படுத்துவேன்.
நான் இங்கு மைல்கல் விளையாடவில்லை. என்னுடைய அணியின் வெற்றிக்காக தான் நான் விளையாடுகிறேன். அணிக்கு என்ன தேவையோ அதை தான் நான் செய்கின்றேன். பும்ராவிடம் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய பல பந்துகள் இருக்கிறது. அதனை எதிர்கொள்ள வேண்டும் என்றால் நாம் பாசிட்டிவாக இருக்க வேண்டும். பும்ரா வீசும் அனைத்து பந்துக்கு எதிராகவே ரன் குவிக்க வேண்டும் என்பது இல்லை. கடந்த சில வாரங்களாக நான் நன்றாக பேட்டிங் செய்து வருவது மகிழ்ச்சியை கொடுக்கிறது என டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார்.