பாதி போட்டியில் வெளியேறிய உமேஷ் யாதவ்.. பதறிய ரசிகர்கள்.. செம சிக்கலில் இந்திய அணி!
மெல்போர்ன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் காயத்தால் வெளியேறினார்.
அதனால், ரசிகர்கள் இடையே பரபரப்பு எழுந்தது. இரண்டாம் இன்னிங்க்ஸில் அவரால் பந்து வீச முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே கொண்ட இந்திய அணியில் அதில் ஒரு முக்கிய பந்துவீச்சாளர் காயம் அடைந்ததால் இந்திய அணி சிக்கலில் உள்ளது.

இரண்டாவது டெஸ்ட்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய அணி ரஹானே தலைமையில் களமிறங்கி ஆடி வருகிறது.

இந்தியா முன்னிலை
முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி ரஹானே சதம் அடித்ததை அடுத்து 326 ரன்கள் குவித்தது. ரஹானே 112, ஜடேஜா 57 ரன்கள் குவித்தனர். இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 131 ரன்கள் முன்னிலை பெற்றது.

உமேஷ் யாதவ்
இரண்டாம் இன்னிங்க்ஸில் இந்திய அணி பந்து வீசியது. உமேஷ் யாதவ் முதல் இன்னிங்க்ஸில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், இரண்டாம் இன்னிங்க்ஸில் முதல் விக்கெட்டை வீழ்த்தி திருப்பம் அளித்தார். ஜோ பர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார் உமேஷ்.

வலியால் துடித்தார்
அவர் இரண்டாம் இன்னிங்க்ஸில் துவக்கம் முதல் தொடர்ந்து பந்து வீசி வந்த நிலையில், 8வது ஓவரில் அவர் நான்காவது பந்தை வீசும் முன் தடுமாறினார். ஓடி வரும் போது காலில் ஏற்பட்ட வலியால் துடித்தார். இதையடுத்து பிசியோதெரபிஸ்ட் வரவழைக்கப்பட்டார்.

வலியுடன் வெளியேறினார்
எனினும், உமேஷ் யாதவ்வால் சரியாக நடக்கக் கூட முடியவில்லை. அவர் வலியுடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இந்திய அணி இதனால் சிக்கலில் உள்ளது. அவரைத் தவிர்த்து பும்ரா, முகமது சிராஜ் மட்டுமே அணியில் வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்றுள்ளனர்.

சிக்கல்
அஸ்வின். ஜடேஜா இருப்பதால் அதிக ஓவர்களை அவர்களுக்கு அளித்து கேப்டன் ரஹானே சமாளிப்பார் என கருதப்படுகிறது. ஒருவேளை ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டால் நிச்சயம் உமேஷ் காயம் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications