ராய்ப்பூர் : நான்காவது டி20 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அம்பயர்கள் மூன்று டிஆர்எஸ் முடிவுகளை கொடுத்தார்கள். ஆனாலும், இந்தியா போராடி வெற்றி பெற்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி20 போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 174 ரன்கள் குவித்தது. ரிங்கு சிங் அடித்த 46 ரன்களே அணியின் இந்த ஸ்கோருக்கு முக்கிய காரணமாக இருந்தது.
அவர் கடைசி ஓவரில் நின்றால் இந்தியா கூடுதலாக ரன் குவிக்கும் என்ற நிலையில் 20வது ஓவரின் முதல் பந்தில் எல்பிடபுள்யூ கேட்டது ஆஸ்திரேலியா. அப்போது அம்பயர் அவுட் கொடுத்தார். பின்னர் ரிங்கு சிங் ரிவ்யூ செய்த போது பந்து லெக் ஸ்டம்ப்பில் பட்டது. விதிப்படி லெக் ஸ்டம்ப்பில் பந்து பட்டால் அவுட் இல்லை. ஆனால், அம்பயர் முன்பு எடுத்த முடிவே இறுதியானது. அதன்படி அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

அடுத்து இந்தியா பந்து வீசும் போது ரவி பிஷ்னோய் வீசிய மூன்று பந்துகளில் பென் மெக்டேர்மாட்டுக்கு எல்பிடபுள்யூ கேட்டது இந்தியா. அதில் இரண்டு முறை அம்பயர் அவுட் தரவில்லை. ரிவ்யூ பார்த்தபோது பந்து லெக் ஸ்டம்ப்பில் பட்டது தெரிந்ததால் அம்பயர் முடிவே இறுதி என அறிவிக்கப்பட்டது.
பின்னர் அக்சர் பட்டேல், பென் மெக்டேர்மாட்டை பவுல்டு அவுட் செய்து வீழ்த்தினார். இதை அடுத்து இந்திய அணி தப்பித்தது. அம்பயர் மூன்று முறை இந்திய அணிக்கு பாதகமாக தீர்ப்பு அளித்த போதும், ரவி பிஷ்னோய், அக்சர் பட்டேல் சிறப்பாக பந்துவீசியதால் இந்தியா தப்பியது.
அக்சர் பட்டேல் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ரவி பிஷ்னோய் 17 ரன் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதை அடுத்து ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 154 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய் மட்டும் இல்லையென்றால் இந்தியா இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இருக்காது. அவர்கள் ரன்களை கட்டுப்படுத்தியதால் இந்தியா வென்றது.