அடிலெய்டு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது அம்பயர் அளித்த தவறான தீர்ப்பு சர்ச்சையை கிளப்பியது. அஸ்வின் வீசிய 58 வது ஓவரில் மூன்றாவது அம்பயர் ரிவ்யூவின் போது தவறான முடிவை எடுத்தார். அதனால், இந்திய அணி ஒரு ரிவ்யூவையும் இழந்தது. பின்னர், விராட் கோலி அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து அந்த ரிவ்யூ மீண்டும் அளிக்கப்பட்டது.
இந்த போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகி இருந்தது. அடுத்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடியது. அந்த அணியில் மார்னஸ் லாபுஷேன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்தார்.

லாபுஷேன் ஆட்டம் இழந்த பின் இந்திய அணி விரைவாக விக்கெட்களை வீழ்த்த முனைந்தது. அஸ்வின் தொடர்ந்து பந்து வீசி வந்தார். அவர் வீசிய 58வது ஓவரில் மிட்செல் மார்ஷ் சந்தித்த மூன்றாவது பந்தில் அவுட் கேட்கப்பட்டது. பந்து மார்ஷின் காலில் பட்டதால் அஸ்வின் அவுட் கேட்டிருந்தார்.
களத்தில் இருந்த அம்பயர் அவுட் தர மறுத்தார். அதன் பின் இந்திய அணி ரிவ்யூ கேட்டது. மூன்றாவது அம்பயரான ரிச்சர்ட் கெட்டில்பரோ வேக, வேகமாக ரீப்ளேவை பார்த்துவிட்டு பந்து பேட்டில் பட்டதா? அல்லது காலில் பட்டதா? என சரியாக பார்க்க முடியவில்லை எனக் கூறியதோடு அவுட் இல்லை என அறிவித்தார்.
ஆனால், ரீப்ளேவில் பந்து முதலில் காலில் படுவது தெரிந்தது. ஆனால், மூன்றாவது அம்பயர் ஸ்னிக்கோ மீட்டரை மட்டுமே பார்த்தார். அப்போது பந்து பேட்டில் படுவது போல இருந்தது. ஆனால், பந்து எங்கே படுகிறது? என உறுதியாக தெரியாததால் அவர் இந்த முடிவை எடுத்தார். ரீப்ளேவில் பந்து முதலில் காலில் உரசுவது தெரிந்தது. மேலும், பால் டிராக்கிங்-கையும் அம்பயர் பார்க்கவில்லை.
இதை அடுத்து மூன்றாவது அம்பயரின் அவசர கதி முடிவால் இந்திய அணி ரிவ்யூவையும் இழந்தது. ஒருவேளை பந்து காலில் பட்டதாக எடுத்துக் கொண்டு இருந்தாலும் பால் ட்ராக்கிங்கில் வந்து லெக் ஸ்ட்ம்பை உரசியது. இதுபோல நடந்தால் களத்தில் அம்பயர் எடுத்த முடிவு இறுதியானதாகும். அதன்படி பார்த்தால் இது நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டிருக்கும். அதனால், இந்திய அணி விக்கெட் வாய்ப்பை இழக்கவில்லை.
ஆனால், முதல் டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுலுக்கு இதே போன்ற சூழ்நிலையில் அவுட் கொடுக்கப்பட்டது. அப்போது பந்து முதலில் பேட்டில் உரசி இருந்தது. ஆனால், அம்பயர் அதை சரி பார்க்காமல் அவுட் கொடுத்து இருந்தார். அது குறித்து பின்னர் விராட் கோலி வாக்குவாதம் செய்தார்.