பெனோனி : அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற ஆஸ்திரேலிய அணி 254 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதற்கு காரணம், சேஸிங் எப்போதுமே பைனலில் மிகவும் கடினமாக இருக்கும்.
இதனை பயன்படுத்தி கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க முயன்றனர். தொடக்க வீரர் சாம் டக் அவுட்டாக, 2வது விக்கெட்டுக்கு கேப்டன் வெய்பிகன் மற்றும் ஹாரி டிக்சன் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 78 ரன்களை சேர்த்தது.

இந்திய வீரர் திவாரி வீசிய அபார பந்தால் வெய்பிகன் 48 ரன்களில் முஷிர் கானிடம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து ஹர்ஜாஸ் சிங் களத்தில் நின்று அபாரமாக விளையாடி 3 பவுண்டரி, 3 சிக்சர் எடுத்து அரைசதம் கடந்தார். விக்கெட் கீப்பர் ரியான் ஹிக்ஸ் 20 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் ரன்களை வாரி குவிக்க முயன்றாலும், இந்திய வீரர்கள் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். எனினும் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுக்கு தேவைப்பட்ட ரன்களை சேர்த்து கொண்டார்கள்.
ஆலிவர் 46 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக பந்துவீசிய ராஜ் லிம்பானி 10 ஓவர்கள் வீசி 38 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதே போன்று நமன் திவாரி 2 விக்கெட்டுகளும், சௌமி பாண்டே, முஷிர் கான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த இறுதிப் போட்டியில் தற்போது இந்தியாவுக்கு பெரும் சவால் காத்திருந்தது. ஏனென்றால், அண்டர் 19 உலக கோப்பை வரலாற்றில் இறுதி போட்டியில் அதிக ரன்கள் எடுத்து இருப்பது இது தான் முதல் முறை.இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் மோசமான ஷாட்களை ஆடி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் மூலம் 174 ரன்களில் இந்திய அணி தோல்வியை தழுவி, கோப்பையை தவறவிட்டது.