பெனானி : 2024 அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீசியது. ஆஸ்திரேலிய அணி துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆட வேண்டும் என்ற திட்டத்துடன் வந்தது.
ஆனால், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ராஜ் லிம்பானி முதல் 10 ஓவர்களில் 5 ஓவர்களை தொடர்ந்து வீசி அசத்தினார். அத்துடன் ஆஸ்திரேலிய துவக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் விக்கெட்டை வீழ்த்தினார். ராஜ் லிம்பானி போட்டியின் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஐந்து பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காமல் திணறி இருந்தார் சாம் கோன்ஸ்டாஸ்.

இந்த நிலையில், ராஜ் லிம்பானி வீசிய போட்டியின் மூன்றாவது ஓவரில் அவர் தன் விக்கெட்டை இழந்தார். ராஜ் லிம்பானி பந்துவீச்சில் 8 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார் சாம். ஆஸ்திரேலிய அணி முதல் 10 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே எடுத்தது. மிடில் ஓவர்களில் இந்திய அணியின் ஸ்பின் பந்துவீச்சில் ரன் குவிப்பது சிரமம் என்பதால் ராஜ் லிம்பானி தனக்கு அளிக்கப்பட்ட வேலையை சரியாக செய்து இருந்தார். அதன் பின் அதிரடி ஆட்டம் ஆட முயன்ற ரியான் ஹிக்ஸ் மற்றும் பின் வரிசை வீரர் சார்லி என மொத்தம் 3 விக்கெட்களை கைப்பற்றினார் லிம்பானி. ராஜ் லிம்பானி 10 ஓவர்கள் வீசி 38 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
எனினும், இந்திய அணி விரைவாக விக்கெட்களை வீழ்த்தவில்லை. அதன் காரணமாக ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 253 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த இந்திய அணி பதற்றம் அடைந்து 174 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் 2024 அண்டர் 19 உலகக்கோப்பையை வென்றது. ராஜ் லிம்பானியின் சிறப்பான பந்துவீச்சு வீணாகிப் போனது.