பெனானி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா தெளிவாக திட்டம் போட்டு இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது.
அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில் இதுவரை சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 242 தான். கடந்த 1998இல் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
இந்த நிலையில், அந்த ஸ்கோரை தாண்டி ஒரு ரன் எடுத்தாலும் கூட அது இந்திய அணிக்கு ஒரு வித அழுத்தத்தை கொடுக்கும் என திட்டம் போட்டது ஆஸ்திரேலிய அணி. அதாவது 26 வருட ரெக்கார்டை முறியடிக்க வேண்டும் என்பது இந்திய வீரர்களுக்கு மன ரீதியாக ஒரு வித அழுத்தத்தை கொடுக்கும் அதை வைத்தே அவர்களை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என திட்டமிட்டது ஆஸ்திரேலியா.
தங்கள் திட்டப்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 253 ரன்கள் குவித்து அண்டர் 19 உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது. இதுவரை அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுதான்.
இந்தியாவுக்கு 254 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 26 ஆண்டு கால அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டி சாதனையை முறியடிக்க வேண்டிய அழுத்தத்துடன் இந்திய அணி சேஸிங் செய்யத் துவங்கியது. முதல் விக்கெட் வீழ்ந்த உடனே இந்திய வீரர்கள் கடும் அழுத்தத்துக்கு சென்று ரன்னே எடுக்காமல் பந்துகளை வீணடித்து வந்தனர். அழுத்தத்தை குறைக்கவே அவ்வாறு செய்தனர். ஆனால், அவர்கள் திட்டம் பலிக்கவில்லை. .

இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து 122 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது. துவக்க வீரர் ஆதர்ஷ் சிங் 47 ரன்கள், பின்வரிசை பேட்ஸ்மேன் முருகன் அபிஷேக் 42 ரன்கள் எடுத்தாலும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் இந்திய அணி 174 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகி தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி வீரர் ஹர்ஜாஸ் சிங் அரைசதம் அடித்ததே அந்த அணி 253 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக அமைந்தது. இந்திய அணி பந்துவீச்சில் விரைவாக விக்கெட் வீழ்த்த தவறியதோடு, பேட்டிங்கில் மிகவும் நிதான ஆட்டம் ஆட முயன்று 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவின் திட்டம் இந்திய அணியின் மோசமான விக்கெட் சரிவுக்கு வழி வகுத்தது. அந்த அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது. மூத்த வீரர்கள் அணி தோல்வி அடைந்தாலும் அண்டர் 19 அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அண்டர் 19 உலகக்கோப்பையில் பழி தீர்க்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த தோல்வியால் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.