பெனானி : 2024 அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி கேப்டன் உதய் சாகரன் எடுத்த தவறான முடிவு இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த தொடரில் ஒரு தோல்வி கூட அடையாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை சந்தித்தது. இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு இந்த உலகக்கோப்பை தொடரில் எப்போதும் முதல் 10 ஓவர்களில் விக்கெட் எடுத்துக் கொடுத்த வேகப் பந்துவீச்சாளர்கள் நமன் திவாரி மற்றும் ராஜ் லிம்பானி பந்து வீசினர். நமன் திவாரி தான் வீசிய முதல் ஓவரிலேயே 15 ரன்கள் விட்டுக் கொடுத்ததால் அதன் பின் அவருக்கு ஓவர் அளிக்கப்படவில்லை. ராஜ் லிம்பானி ரன்னும் கொடுக்காமல், ஒரு விக்கெட்டும் வீழ்த்தியதால் அவருக்கு தொடர்ந்து 5 ஓவர்கள் கொடுத்தார் உதய் சாகரன்.
இதை அடுத்து ஆஸ்திரேலிய அணி ராஜ் லிம்பானி ஓவர்களில் மட்டும் தடுப்பாட்டம் ஆடி விட்டு மற்ற பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் சீராக ரன் குவிக்கத் துவங்கியது. இதனால், ரன் ரேட் குறைந்தாலும் விக்கெட் கிடைக்கவில்லை. பின்னர் 21வது ஓவரில் மீண்டும் நமன் திவாரியை அழைத்தார் சாகரன், நமன் அடுத்தடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
முதல் ஓவரில் ரன் கொடுத்து இருந்தாலும் பவர் பிளே ஓவர்களில் நமன் திவாரியை பந்து வீச விட்டிருந்தால் ஆஸ்திரேலியா அப்போதே ஒன்று, இரண்டு விக்கெட்களை இழந்து இருக்கும். விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளரை நம்பாமல் விட்டதால் ஆஸ்திரேலியா 94 ரன்கள் ரன்களில் தான் 2வது விக்கெட்டையே இழந்தது.
ஓரளவு ரன் குவித்து விட்டதால் அதன் பின் விக்கெட் வீழ்ச்சி குறித்து அஞ்சாமல் ஆஸ்திரேலியா ரன் குவித்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. அண்டர் 19 வரலாற்றிலேயே இந்த ஸ்கோரை எந்த அணியும் சேஸ் செய்யவில்லை என்பதால் பதற்றம் அடைந்து 174 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகி தோல்வி அடைந்தது. இந்திய அணி கேப்டன் உதய் சாகரன் முதல் சில ஓவர்களில் பந்துவீச்சை சரியாக திட்டமிடாமல் போனது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.