லக்னோ: உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி அசத்தி வரும் சூழலில், அவரின் சொந்த கிராமத்தில் சிறிய மைதானம் அமைக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி படைத்துள்ள சாதனைகளை எழுத தனி புத்தகமே தேவை என்று சொல்லலாம். ஏனென்றால் கனவில் யோசிக்கும் பல்வேறு சாதனைகளை அசால்ட்டாக ஒவ்வொரு போட்டியிலும் செய்து வருகிறார் முகமது ஷமி.

இந்த உலகக்கோப்பை தொடரில் முகமது ஷமி வெறும் 6 போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி 23 விக்கெட்டுகளை வீழ்த்தி கோல்டன் பாலுக்கான ரேஸில் முதலிடத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை வரலாற்றிலேயே 50 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதுவரை 16 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள முகமது ஷமி, மொத்தமாக 54 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதிலும் அரையிறுதி போட்டியில் ஒற்றை ஆளாக பந்துவீசி இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றதன் மூலம் இந்தியாவின் ஹீரோவாக முகமது ஷமி மாறி இருக்கிறார். அவர் வீசும் ஒவ்வொரு பந்திலும் எதிரணிகள் பதற்றத்தால் திண்டாடி வருகிறார்கள்.
முகமது ஷமியின் தாக்கத்தால் ஏராளமான இளைஞர்கள் இனி வரும் காலங்களில் அவரை போல் பந்தை பேஸ் பகுதியை பிடித்து ஸ்விங் செய்வது எப்படி என்று பழகுவார்கள். இந்த நிலையில் உத்தரப் பிரதேச அரசு தரப்பில் முகமது ஷமியை கவுரவிக்கும் வகையில் முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது முகமது ஷமி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சஹஸ்பூர் அலிநகர் கிராமத்தில் பிறந்தவர்.
இதனால் முகமது ஷமியை போல் இன்னும் பல வீரர்கள் அந்த கிராமத்தில் உருவாகுவதற்கு வசதியாக, அங்கு அரசு தரப்பில் சிறிய அளவிலான மைதானம் மற்றும் திறந்த வெளி உடற்பயிற்சி கூடம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான திட்டமும் வகுக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தியாகி கூறியுள்ளார்.