மும்பை: இந்திய கிரிக்கெட்டின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ், இஷாந்த் சர்மா ஆகியோரின் பந்துகளை, ஒரு 14 வயது சிறுவன் மைதானத்தை தாண்டி வெளியே சிக்ஸ் அடிப்பதை பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு நம்பமுடியாத காட்சியை 2025 ஐபிஎல் தொடரில் அரங்கேற்றிக் காட்டினார் இந்தியாவின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி. அவரது அந்த அசுரத்தனமான ஆட்டத்தைப் பார்த்து, ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடி ஜாம்பவான் மேத்யூ ஹெய்டனே, "அவனுக்கு 14 வயது என்பதை என்னால் நம்ப முடியவில்லை" என்று கூறியதாக, முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் பெயர், தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. 13 வயதிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1.1 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 14 வயதில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் விளாசி, ஐபிஎல் வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற சரித்திர சாதனையைப் படைத்தார்.
இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிராக 78 பந்துகளில் 143 ரன்களும், ஆஸ்திரேலியா அண்டர்-19 அணிக்கு எதிராக 62 பந்துகளில் 104 ரன்களும் குவித்து, சர்வதேச அளவிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் ஏப்ரல் 28 அன்று நடந்த அந்தப் போட்டியை ரவி சாஸ்திரி நினைவு கூர்ந்தார். "நான் அந்தப் போட்டியில் வர்ணனை செய்து கொண்டிருந்தேன். நான் பேசத் தொடங்கிய 4-வது ஓவரிலிருந்து, அடுத்தடுத்து இரண்டு முறை பேசினேன். 10-வது ஓவருக்குள் வைபவ் சதம் அடித்துவிட்டார்" என்றார்.
"இந்தியாவின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ், இஷாந்த் சர்மா ஆகியோரின் பந்துகளை, எக்ஸ்ட்ரா கவர் மற்றும் மிட்விக்கெட் திசையில், 10 வரிசைகளுக்குப் பின்னால் சிக்ஸருக்குப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தார் வைபவ். அப்போது என்னுடன் வர்ணனையில் இருந்த மேத்யூ ஹெய்டன், 'ஓ... அவனுக்கு 14 வயதாக இருக்கவே முடியாது!' என்றார். நான், 'கமான், கொஞ்சம் அமைதியாக இருங்க,' என்று சொன்னேன்," என்று ரவி சாஸ்திரி அந்தத் தருணத்தை விவரித்தார்.
அந்தப் போட்டியில், 210 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக, 7 பவுண்டரிகள் மற்றும் 11 ராட்சத சிக்ஸர்களுடன் 101 ரன்கள் குவித்த வைபவ், 16 ஓவர்களிலேயே அணியை வெற்றி பெற வைத்தார். ஒரு 14 வயது வீரரிடமிருந்து இப்படி ஒரு முதிர்ச்சியான மற்றும் அசுரத்தனமான ஆட்டத்தை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.