சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்களிடையே நடந்த பயிற்சி ஆட்டத்தில் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி 15 ரன்களிலும், ரிஷப் பண்ட் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கின்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இந்தியா ஏ அணி மற்றும் இந்திய அணி வீரர்களுக்கு இடையில் பயிற்சி ஆட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அந்த பயிற்சி போட்டியை பிசிசிஐ ரத்து செய்தது.

அதற்கு மாறாக பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சியை மேற்கொள்ளும் வகையில் ஆட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஏனென்றால் பயிற்சி போட்டிக்கு பதிலாக பிரிந்து விளையாடினால் கூடுதல் நேரம் கேம் டைம் கிடைக்கும் என்று பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா முடிவு செய்தனர்.
அந்த வகையில் இன்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 15 ரன்களில் ஆட்டமிழக்க, கேஎல் ராகுல் திடீரென காயம் காரணமாக பெவிலியன் திரும்பினர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி கவர் ட்ரைவுடன் அற்புதமாக பேட்டிங்கை தொடங்கினார்.
ஆனால் முகேஷ் குமாரின் பவுலிங்கில் ஸ்லிப் திசையில் நின்ற ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து விராட் கோலி 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக ரன்கள் விளாசினாலும், 19 ரன்களில் நடையை கட்டினார். பேட்ஸ்மேன்களை விடவும் பவுலர்களே இந்த பயிற்சியில் ஆதிக்கம் செலுத்தினர். குறிப்பாக முகேஷ் குமார் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இருவரும் அசத்தலாக பவுலிங் செய்திருக்கின்றனர்.
இன்னொரு பக்கம் பிரசித் கிருஷ்ணா பவுலிங்கின் போது சரியான லைன் மற்றும் லெந்தை பிடிக்க முடியாமல் தடுமாறினார். தொடர்ந்து உணவு இடைவேளை தொடங்கிய போது, பிரசித் கிருஷ்ணாவுடன் கேப்டன் பும்ரா நீண்ட நேரம் உரையாடினார். அதேபோல் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் பும்ரா இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அதேபோல் ஜெய்ஸ்வால், விராட் கோலி உள்ளிட்டோர் ஆட்டமிழந்த பின் உடனடியாக பெவிலியன் திரும்பாமல், நேராக வலைப் பயிற்சிக்கு சென்று பேட்டிங் செய்துள்ளனர். இதன் மூலமாக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா பிட்ச்-க்கு ஏற்ப விரைவாக தகவமைத்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.