மெல்போர்ன்: இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இருவரையும் அடுத்த 2 போட்டிகளிலும் அமைதியாக வைத்திருக்கவே விரும்புவதாக ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் சிறந்த வீரர்கள் என்று கூறிய அவர், பாக்ஸிங் டே டெஸ்டில் எந்த வீரர் எழுச்சி பெறுவார் என்பதை கணிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி தான் இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அடிலெய்டு மைதானத்தில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டான பின், விராட் கோலி நாடு திரும்பினார். இதன்பின் ரஹானேவின் அபார சதத்தால், இந்திய அணி மரண மாஸ் கம்பேக்கை கொடுத்தது.

இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நாளை நடக்கவுள்ள பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியும் இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எம்சிஜி பிட்ச் வழக்கம் போல் நன்றாக இருக்கிறது. கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக எப்படி இருந்ததோ, அப்படிதான் இருக்கிறது என்று கருதுகிறேன்.
கொஞ்சம் பிட்சில் புற்கள் நிரம்பி இருக்கிறது என்று நினைக்கிறேன். பிட்ச் தயாரிப்பாளர்கள் மிகச்சிறந்த பணியை செய்திருக்கிறார்கள். வானிலை கொஞ்சம் கூடுதல் வெப்பத்துடன் இருக்கிறது. அதேபோல் நேதன் லயன் மெல்போர்னில் மிகச்சிறந்த ரெக்கார்டை வைத்திருக்கிறார். அதனால் இந்த டெஸ்ட் போட்டியில் லயனின் பவுலிங் மிகவும் முக்கிய அம்சமாக இருக்கும். பிட்சில் ஸ்பின்னர்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்றால் ஆச்சரியம் தான் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த கம்மின்ஸ், விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் சிறந்த வீரர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனால் இந்த டெஸ்ட் தொடரின் ஏதோவொரு கட்டத்தில் இருவரும் கம்பேக் கொடுத்து எங்களுக்கு சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. இருந்தாலும் அப்படி நடக்கக் கூடாது என்பதே ஆசை.
ரோஹித் சர்மா ஃபார்மில் இல்லை என்று பார்க்க தேவையில்லை. சில ஆண்டுகளுக்கு முன் இதே மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ரஹானே சதம் அடித்தார். அதனால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் எங்களுக்கு சவாலான ஆட்டமாக அமைந்தது.
அதனால் ஃபார்மில் இல்லை என்று மகிழ்ச்சியடைய தேவையில்லை. ஒவ்வொரு அணிக்குள்ளும் ஒரு சவாலான விஷயங்கள் இருக்கின்றன. என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து எழுச்சி பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. பெர்த் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் அடிலெய்டு மற்றும் பிரிஸ்பேனில் எங்களின் ஆட்டம் மேம்பட்டிருக்கிறது. அதனால் பாக்ஸிங் டே டெஸ்டிலும் சிறப்பாக செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.