பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேஎல் ராகுல் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவருக்கும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சல்யூட் வைத்து பாராட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணியின் கைகள் ஓங்கியுள்ளது. முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில், 2வது நாள் ஆட்டத்தில் முதல் செஷன் முழுவதும் மிட்சல் ஸ்டார்க் பேட்டிங் ஆடினார். 27 ரன்களை கூடுதலாக சேர்த்ததால், ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணியின் கேஎல் ராகுல் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் டிஃபென்ஸ் ஆடியே ஆஸ்திரேலியா பவுலர்களை சோர்வடைய வைத்தனர். ஒரு கட்டத்தில் பிட்சில் எந்த உதவியும் கிடைக்காததால், ஆஃப் ஸ்டம்ப் லைனில் மட்டுமே வீசினர். அதனை இரு பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் லீவ் செய்ய, மாற்று திட்டத்தையும் உருவாக்க முடியாமல் தவித்தனர்.
சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து புதிய சாதனை படைக்க, இந்திய அணியின் ஸ்கோர் விரைவாக ஏற்றம் கண்டது. இறுதியாக 2வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலமாக இந்திய அணியின் முன்னிலை 218 ரன்களாக இருக்கிறது. இளம் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 193 பந்துகளில் 2 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 90 ரன்களை குவித்துள்ளார்.
இன்னொரு பக்கம் கேஎல் ராகுல் 153 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகள் உட்பட 62 ரன்களுடன் களத்தில் உள்ளார். 2018ஆம் ஆண்டு எம்சிஜி மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி - புஜாரா இருவரும் இணைந்து 2 செஷன்கள் முழுக்க பேட்டிங் ஆடி அசத்தினர். அதன்பின் கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் இருவரும் இணைந்து 2 செஷன் முழுக்க பேட்டிங் ஆடி இருக்கின்றனர்.
2வது நாள் ஆட்டம் முடிவடைந்த பின் ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் இருவரும் பெவிலியன் நோக்கி நடந்தனர். அப்போது பேட்டிங் பயிற்சியை செய்வதற்காக களத்திற்குள் வந்த விராட் கோலி, கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் இருவரையும் பார்த்து சல்யூட் வைத்து பாராட்டினார். அதேபோல் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஓய்வறை வாசலில் நின்று கைகளை தட்டி வரவேற்றனர்.
2வது நாளில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செய்த நிலையில், நாளைய ஆட்டத்திலும் இந்திய அணி பேட்டிங்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பாக பேட்டிங் செய்யும் பட்சத்தில் கடைசி செஷனில் ஆஸ்திரேலியா அணியை பேட்டிங் செய்ய இந்திய அணி அழைக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.