அடிலெய்டு: ஆஸ்திரேலியா அணியின் மிட்சல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்த இந்திய அணி தரப்பில் டிஆர்எஸ் அப்பீல் சென்ற போது, 3வது அம்பயர் கொடுத்த முடிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் விராட் கோலி கள நடுவர்களுடன் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் ஆஸ்திரேலியா அணியின் மிட்சல் ஸ்டார்க் வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது டிஆர்எஸ் அப்பீலுக்கு சென்ற போது, கேஎல் ராகுல் பேட் மற்றும் காலில் அணிந்த பேட் இரண்டும் ஒரே பந்துடன் உரசியது தெரிய வந்தது. இதனால் 3வது நடுவர் ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமான முடிவை எடுத்தார்.

அதேபோன்ற சம்பவம் 2வது டெஸ்ட் போட்டியில் நடந்திருக்கிறது. அஸ்வின் வீசிய 58வது ஓவரின் 3வது பந்து மிட்சல் மார்ஷ்-ன் பேடில் அடித்து சென்றது. உடனடியாக அஸ்வின் அவுட் என்று முறையிட்ட போது, கள நடுவரால் அவுட் கொடுக்கப்படவில்லை. இதன்பின் இந்திய அணி உடனடியாக 3வது நடுவரிடம் டிஆர்எஸ் முறையீடு செய்தது. 3வது நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பரோ செயல்பட்டார்.
அவர் பந்து பேட்டில் உரசியதா என்பதை மட்டுமே ஸ்னிக்கோவில் பார்த்துவிட்டு, அவசர அவசரமாக நாட் அவுட் என்று தீர்ப்பு வழங்கினார். ஆனால் 3வது நடுவர் பந்து பேடில் பட்டதா அல்லது பேட்டில் பட்டதா என்பதை அறிய முறையான ஆதாரம் இல்லை என்று கூறியிருந்தார். தொடர்ந்து ரீப்ளேவில் அஸ்வின் வீசிய பந்து முதலில் பேடிலும், பின்னர் மிட்சல் மார்ஷ் பேட்டிலும் அடித்து சென்றது தெரிய வந்தது.
3வது நடுவரின் தீர்ப்பால் இந்திய அணியின் ஒரு டிஆர்எஸ் ரிவ்யூ-வும் பறிபோனது. அப்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி களத்தில் இருந்த நடுவர்களிடம், பெர்த் டெஸ்ட் போட்டியில் இப்படிதான் கேஎல் ராகுலுக்கு நடந்தது.. அப்போது மட்டும் எப்படி அவுட் கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியது.
இதனைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் இந்திய அணிக்கு இழந்த டிஆர்எஸ் ரிவ்யூ திருப்பி அளிக்கப்பட்டது. இதனால் இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியா அணி தில்லுமுல்லு செய்வதாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 3வது நடுவரின் தீர்ப்பு பல்வேறு தருணங்களில் ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாக மட்டும் வருவது எப்படி என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.