மும்பை : இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியிடம் ஆஸ்திரேலிய ரசிகர்கள் வரம்பு மீறி செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடிய போது கேப்டன் ரோகித் சர்மா மூன்று ரன்களிலும், ராகுல் 24 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

இதனை அடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் கோலி ஜோடி அபாரமாக விளையாடி மூன்றாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. இந்த நிலையில் ஜெய்ஸ்வால் 82 ரன்கள் ஆட்டம் இழக்க, கோழி 36 ரன்களில் வெளியேறினார். இதனால் இரண்டாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க இன்னும் 111 ரன்கள் அடிக்க வேண்டும். இந்த சூழலில் விராட் கோலி மீது ஆஸ்திரேலிய ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நேற்று 19 வயது வீரரான ஷாம் கோன்ஸ்டாசை விராட் கோலி மோதியதால் அவர் மீது அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் கோலியை ஆஸ்திரேலிய ஊடகங்களும் ரசிகர்களும் குறிவைத்து தாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், 36 ரன்களில் ஆட்டம் இழந்த பிறகு விராட் கோலி பெவிலியன் நோக்கி சென்றார். அப்போது அங்கு இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் விராட் கோலியை நோக்கி வரம்பு மீறிய சொற்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். முதலில் பொறுமையாக போன விராட் கோலி, ரசிகர்கள் வரம்பு மீறியதை அடுத்து கடும் கோபத்திற்கு ஆளானார்.
இதனை அடுத்து கொலை காண்டில் விராட் கோலி உள்ளே இருந்து வெளியே வந்து தம்மை கேலி செய்த ரசிகர்களை பார்த்து முறைத்தார். உடனே பிரச்சனை கை மீறி செல்வதை உணர்ந்த ஆஸ்திரேலிய பாதுகாவலர்கள் விராட் கோலியை சமாதானப்படுத்தி அவரை பெவிலியனுக்குள் அழைத்துச் சென்றனர்.