துபாய்: ஐசிசி தொடர் வரலாற்றில் அதிக அரைசதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார். ஐசிசி தொடர்களில் மட்டும் 24 அரைசதங்களை விளாசியுள்ள விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரியின் அபார அரைசதம் காரணமாக 49.3 ஓவர்களில் 264 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பவுலிங் செய்த முகமது ஷமி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடர்ந்து இந்திய அணி தரப்பில் களமிறங்கிய சுப்மன் கில் 8 ரன்களிலும், ரோஹித் சர்மா 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின் விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி இணைந்து விரைவாக ரன்களை சேர்த்தது. எந்த பதற்றமும் இல்லாமல் ஸ்பின்னர்களை இருவரும் வெளுத்து கட்டினர். அதேபோல் தேவைக்கேற்ப பவுண்டரியையும் விளாசினர்.
சிறப்பாக ஆடிய விராட் கோலி 53 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 75வது அரைசதம் இதுவாகும். இந்த அரைசதம் மூலமாக விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 3 பேட்ஸ்மேனாக களமிறங்கி 12 ஆயிரம் ரன்களை விளாசிய 2வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி செய்துள்ளார்.
அதேபோல் ஐசிசி தொடர் வரலாற்றில் விராட் கோலி அடிக்கும் 24வது அரைசதம் இதுவாகும். இதுவரை ஐசிசி தொடர்களில் 23 அரைசதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருந்தார். இந்த சாதனையை விராட் கோலி முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 10வது அரைசதம் இதுவாகும்.
அதுமட்டுமல்லாமல் ஐசிசி தொடரின் நாக் அவுட் போட்டிகளில் ஆயிரம் ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற புதிய வரலாற்றை விராட் கோலி படைத்துள்ளார். இவருக்கு பின் ரோஹித் சர்மா 808 ரன்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார். ஒரே நேரத்தில் இவ்வளவு சாதனையை விராட் கோலி படைத்திருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.