பெங்களூர்: ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை, விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பிளாக் (block) செய்த சம்பவம் பற்றி தற்போது வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. இது பற்றி மேக்ஸ்வெல் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.
2017 ஆம் ஆண்டு ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் மைதானத்தை விட்டு வலியுடன் வெளியேறினார். அப்போது தோள்பட்டையை தாங்கிப் பிடித்தபடி கோலி மைதானத்தை விட்டு வெளியேறிய காட்சி இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.

அடுத்து ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங் செய்த போது மேக்ஸ்வெல், விராட் கோலியை கிண்டல் செய்யும் வகையில் தோள்பட்டையை தாங்கிப் பிடித்தபடி நின்று கேலி செய்தார். அதை பார்த்து கோபமடைந்த விராட் கோலி இன்ஸ்டாகிராமில் கிளென் மேக்ஸ்வெல்லை பிளாக் செய்து இருக்கிறார். எனினும், இந்த தகவல் யாருக்கும் தெரியவில்லை.
கிளென் மேக்ஸ்வெல்-லுக்கும் இந்த தகவல் தெரியாமல் இருந்துள்ளது. பின்னர் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கிளென் மேக்ஸ்வெல்லை ஏலத்தில் வாங்கியது. விராட் கோலியின் அணியில் இணைந்ததால் அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர முடிவு செய்து விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கை தேடி இருக்கிறார் மேக்ஸ்வெல்.
ஆனால், விராட் கோலியின் கணக்கு அவருக்கு கிடைக்கவில்லை. இது எப்படி சாத்தியம்? என குழப்பத்தில் இருந்துள்ளார் கிளென் மேக்ஸ்வெல். "ஒரு நபர் உங்களை பிளாக் செய்து விட்டால் அவருடைய கணக்கை உங்களால் பார்க்க முடியாது" என நண்பர் ஒருவர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு தெரிவித்து இருக்கிறார்.
அப்போதுதான் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு கோலி தன்னை பிளாக் செய்தது தெரிய வந்துள்ளது. அதன் பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியின் போது விராட் கோலியிடம் சென்று, "என்னை பிளாக் செய்தீர்களா?" என மேக்ஸ்வெல் நேரடியாகவே கேட்டு இருக்கிறார்.
அப்போது விராட் கோலி, "ஆம். அந்த டெஸ்ட் போட்டியில் என்னை கிண்டல் செய்ததால் எனக்கு வெறுப்பாகிவிட்டது. அதனால் உன்னை பிளாக் செய்ய முடிவு செய்தேன்." என்று கூறி இருக்கிறார். அதன் பின் கோலி தன் கணக்கை அன்பிளாக் செய்ததாகவும், அதன் பின் இருவரும் மிகச் சிறந்த நண்பர்களாக மாறியதாகவும் மேக்ஸ்வெல் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்து இருக்கிறார்