அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 'டக் அவுட்' ஆகி வெளியேறி ரசிகர்களை உறைந்து போக வைத்தார். தனது கோட்டை என வர்ணிக்கப்படும் அடிலெய்டு மைதானத்தில், ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சேவியர் பார்ட்லெட் பந்துவீச்சில் அவர் எல்.பி.டபிள்யூ (LBW) முறையில் ஆட்டமிழந்தார்.
தனது 17 ஆண்டுகால நீண்ட ஒருநாள் கிரிக்கெட் வாழ்வில், விராட் கோலி அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மோசமான சாதனையாகப் பதிவாகியுள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் 6-வது ஓவரை சேவியர் பார்ட்லெட் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே இந்திய கேப்டன் சுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விராட் கோலி களமிறங்கினார். பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் டக் அவுட் ஆனதால், இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அவர் சந்தித்த நான்காவது பந்திலேயே சோகம் அரங்கேறியது.
பார்ட்லெட் வீசிய 6 வது ஓவரின் 5 வது பந்து, லென்த்தில் பிட்ச் ஆகி வேகமாக உள்ளே திரும்பியது (nip-backer). அதை ஃபிலிக் செய்ய முயன்ற கோலி, பந்தின் லைனைத் தவறவிட்டார். பந்து நேராக அவரது பேடில் தாக்கியது. ஆஸ்திரேலிய வீரர்கள் எல்பிடபுள்யூ என அப்பீல் செய்ய, கள நடுவர் சாம் நோகாஜ்ஸ்கி உடனடியாக அவுட் என தனது விரலை உயர்த்தினார்.
இதில் சிறிதும் சந்தேகம் இல்லை என்பதை உணர்ந்த கோலி, மறுமுனையில் இருந்த ரோஹித் சர்மாவுடன் சிறிய ஆலோசனைக்குப் பிறகு, டி.ஆர்.எஸ் (DRS) எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அவர் வெளியேறியபோது அடிலெய்டு மைதானத்தில் அதிர்ச்சி கலந்த அமைதி நிலவியது.
பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் ஒருநாள் டக் அவுட்டைப் பதிவு செய்திருந்தார் கோலி. தற்போது இரண்டாவது போட்டியிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்ததன் மூலம், தனது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார்.
கேப்டன் சுப்மன் கில் ஆட்டமிழந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், அணியின் ஆணிவேரான விராட் கோலியும் டக் அவுட் ஆனது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மறுபுறம் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டி போல முதல் 10 ஓவர்களில் படுநிதானமான பேட்டிங்கை ஆடினார்.