IND vs AUS: இதெல்லாம் நியாயமே இல்லை.. கோலி தப்பித்து விட்டார்.. முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் கதறல்
மெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி செய்த தவறான செயலுக்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு போட்டி சம்பளத்தில் 20 சதவீதம் அபராதம் விதித்து தண்டனை அளித்தது. ஆனால், இது மிகவும் குறைவு என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் புலம்பி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியின் அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸ்-ஐ விராட் கோலி தனது தோள்பட்டையால் இடித்தார். விராட் கோலி வேண்டும் என்றே அவ்வாறு செய்தது ரீப்ளே-வின் மூலம் தெரிய வந்தது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் விராட் கோலி தனது தவறை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு மேட்ச் ரெஃப்ரீ முதல் நிலை விதிமீறலுக்கான தண்டனையை அளித்தார்.

அதன்படி விராட் கோலிக்கு போட்டி சம்பளத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும், ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டது. ஆனால், கோலி செய்த தவறான செயல் இரண்டாம் நிலை குற்றமாக கருதப்பட்டு இருக்க வேண்டும். அவருக்கு குறைந்தபட்சம் மூன்று டீமெரிட் புள்ளிகளில் இருந்து நான்கு டீமெரிட் புள்ளிகள் வரை வழங்கப்பட்டு இருக்க வேண்டும் எனவும், போட்டி சம்பளத்தில் 75 சதவீதம் வரை அபராதம் விதித்து இருக்க வேண்டும் எனவும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் மார்க் வாஹ் மற்றும் ரிக்கி பாண்டிங் கூறி உள்ளனர்.
அதேபோல ஆஸ்திரேலிய ஊடகங்களும் விராட் கோலியிடம் மேட்ச் ரெஃப்ரீ இலகுவாக நடந்து கொண்டதாகவும், அவருக்கு கூடுதல் தண்டனையை வழங்கி இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளன. சமூக வலைதளங்களில் விராட் கோலிக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதித்து இருக்க வேண்டும் என சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.
இது பற்றி பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாஹ், "விராட் கோலிக்கு அளிக்கப்பட்ட இந்த தண்டனை மிகவும் குறைவானது. அவரது செயலை இரண்டாம் நிலை குற்றமாக கருதி இருக்க வேண்டும். அவருக்கு போட்டி சம்பளத்தில் 75 சதவீதம் அபராதம் விதித்து இருக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களால் மற்ற வீரர்களையும் அல்லது ரசிகர்களையும் கைகலப்பில் ஈடுபடச் செய்யும் அபாயம் உள்ளது. நிச்சயமாக எதிரணி வீரருடன் உடல் ரீதியாக நாம் தொடர்பு கொள்ளக்கூடாது." என்றார்.
ரிக்கி பாண்டிங் பேசுகையில், "இந்த சம்பவம் எந்த சூழ்நிலையில் நடந்துள்ளது என்பதை பாருங்கள். ஒரு ஆண்டிலேயே அதிக பார்வையாளர்கள் பார்க்கும் போட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு 15 முதல் 25 சதவீதம் அபராதம் விதிக்கிறார்கள். அதன் மூலம், இது ஏற்றுக் கொள்ளக்கூடிய தவறாக கருதப்படும் அபாயம் உள்ளது. கோலிக்கு கிடைத்தது போதுமான தண்டனை இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications