மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. யாருமே எதிர்பாராத வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கோன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார்.

இதில் ஆறு பவுண்டரிகளும் இரண்டு சிக்சர்களும் அடங்கும். குறிப்பாக பும்ராவின் ஓவரில் அவர் சிக்ஸர்களை விளாசி அசத்தினார். இந்த நிலையில் 19 வயதான கோன்ஸ்டாசிடம் விராட் கோலி வேண்டுமென்று வம்பு இழுத்தார். பந்தை எடுத்துக்கொண்டு விராட் கோலி செல்லும்போது, கோன்ஸ்டாஸ் மீது அவர் மோதினார்.
இதனை அடுத்து கோன்ஸ்டாஸ் தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்க விராட் கோலி அவரிடம் சண்டைக்கு சென்றார். நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த உஸ்மான் கவஜா மற்றும் கள நடுவர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். விராட் கோலியின் இந்த செயலுக்கு இந்திய ரசிகர்களே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.19 வயது இளைஞரிடம் தேவையில்லாமல் விராட் கோலி ஏன் மோதலுக்கு போகிறார் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
விராட் கோலி செய்தது தேவையில்லாத வேலை என்றும், இதனால் விராட் கோலிக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு ஏற்படலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் தொடருக்காக இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கம்பீர் இரட்டை சதம் விளாசினார்.
கம்பீர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பந்து வீசிய வாட்சனை வேண்டுமென்றே தனது முட்டி கையால் கம்பீர் இடித்தார்.இதை அடுத்து கம்பீருக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள் தற்போது இதே போல விராட் கோலி மோதலில் ஈடுபட்டிருப்பதால், அவருக்கும் தடை விதிக்க கூடும் என தெரிவித்திருக்கிறார்கள். தடையிலிருந்து கோலி தப்பித்தாலே பெரிய விஷயம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.