பிரிஸ்பேன்: விராட் கோலியின் ரசிகர் ஒருவர் அவரது மோசமான ஃபார்ம் குறித்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் விராட் கோலி இதுவரை உருவாக்கி வைத்திருக்கும் புகழுக்கு அவரே சேதத்தை ஏற்படுத்தி வருவதாகவும், அதை பார்க்க முடியாமல் அவரது ரசிகரான தான் கடினமாக உணர்வதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
அவரது பேட்டிங் சராசரி மோசமாக சரிந்து வரும் நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டுமாவது ஓய்வு பெற வேண்டும் எனவும் அவர் கூறி இருக்கிறார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் விராட் கோலி ஒரு சதம் அடித்து இருந்தாலும், மற்ற இன்னிங்ஸ்களில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். இதற்கு முன் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் 6 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
இந்த ஆண்டு அவரது பேட்டிங் சராசரி 25 என்பதாகவே உள்ளது. இந்த ஆண்டு அவர் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் மட்டுமே அடித்து இருக்கிறார். இன்னும் மோசமான ஃபார்மில் இருக்கிறார். அதிலும் அவர் ஆட்டம் இழக்கும் விதம்தான் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
ஆஃப் ஸ்டம்பு திசையில் வரும் பந்தை அவர் அடிக்க முயல்கிறார். அதனால் விக்கெட் கீப்பரிடமோ அல்லது ஸ்லிப் திசையிலோ கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வருகிறார். அவரது பலவீனத்தை எதிரணிகள் மிக எளிதாக பயன்படுத்தி வருகின்றன. ஒரு அனுபவ வீரர், டெஸ்ட் உலகின் மன்னனாக இருந்த ஒருவர் இவ்வாறு ஆட்டம் இழப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இது பற்றி ரோகன் குலாவனி என்ற ரசிகர் எழுதி உள்ள கடிதம் - "அன்புள்ள விராட் கோலி, நான் உங்களை ரோஹித்துடனோ அல்லது மற்ற வீரர்களுடனோ சேர்த்து பேசவில்லை. நீங்கள் உங்களுடன் மட்டுமே போட்டி போடுபவர். அந்த அளவுக்கு உங்களது செயல்பாடு உச்சத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உங்களின் ரசிகராக நான் மிகவும் கடினமாக உணர்கிறேன்."
"நீங்கள் குறைவான ஸ்கோர் அடிப்பதால் நான் அப்படி உணரவில்லை. மாறாக நீங்கள் ஆட்டம் இழக்கும் விதம்தான் என்னை கடினமாக உணரச் செய்கிறது. நீங்கள் இதுவரை உருவாக்கி வைத்திருக்கும் புகழை மேலும் சேதப்படுத்தாமல் காப்பாற்றுவதை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். எனக்கு புள்ளி விவரங்களில் பெரிதாக ஆர்வமில்லை. ஆனால், உங்களுடைய டெஸ்ட் சராசரி 47க்கும் கீழே செல்வதை என்னால் பார்க்க முடியவில்லை."
"உங்கள் பேட்டிங் சராசரி ஏற்கனவே மோசமானதாக மாறிவிட்டது. நீங்கள் நிச்சயமாக மேலும் அதிக காலம் விளையாட மாட்டீர்கள் என நம்புகிறேன். குறைந்தபட்சம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டுமாவது ஓய்வு பெறுவதை நீங்கள் ஆலோசிக்க வேண்டும். இப்படிக்கு உங்களின் ஏமாற்றமடைந்த ரசிகர்." இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இந்த கடிதம் விராட் கோலி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவர் இந்த டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலாவது ரன் குவிக்க வேண்டும் என தங்கள் நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்தி வருகின்றனர்.