மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். விராட் கோலி நம்பர் ஒன் வீரராக இன்றளவும் இருப்பதற்கு அவருடைய உணவுப் பழக்கமும் உடல் தகுதியும் தான் காரணம் என்று சொன்னால் மிகை ஆகாது.
நம்பர் ஒன் வீரராக வேண்டுமென்றால் என்ன தேவையோ அதை தான் தொடர்ந்து செய்து வருவதாக விராட் கோலி பல பேட்டியில் கூறியிருக்கிறார்.இந்த நிலையில் விராட் கோலியின் உணவு பழக்கம் என்ன? அவர் எப்படி இவ்வளவு உடல் தகுதியுடன் Fit ஆக இருக்கிறார் என்பது குறித்து அவருடைய மனைவி அனுஷ்கா ஷர்மா ரகசியத்தை கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அனுஷ்கா சர்மாவிடம் விராட் கோலியின் டயட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அனுஷ்கா ஷர்மா, நான் இதுகுறித்து உங்களுக்கு நேர்மையாகவே பதில் அளிக்கின்றேன். உடல் தகுதி மற்றும் உணவு என வந்துவிட்டால் விராட் கோலி 100 சதவீத ஒழுக்கத்துடன் இருப்பார்.
உணவுப் பழக்கமும் உடல் தகுதியும் மிகவும் முக்கியம். இதை சினிமாத்துறை கலைஞர்களும் பின்பற்றி வருகிறார்கள். விராட் கோலி காலையில் எழுந்த உடனே கண்டிப்பாக கார்டியோ உடற்பயிற்சிகளை செய்வார்.( இதன் மூலம் இதயம் நன்றாக செயல்படும்) இல்லையென்றால் வலு தூக்கி உடற்பயிற்சி செய்வார். இதை கண்டிப்பாக அவர் தவற விட மாட்டார். அதன் பிறகு என்னுடன் சில நேரம் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வார்.
உணவு பழக்கத்தில் விராட் கோலி போல் யாராலும் இருக்க முடியாது. தின்பண்டங்களுக்கு அவர் இடமே கொடுக்க மாட்டார். இதே போல் இனிப்பு நிறைந்த கூல்ட்ரிங்க்ஸை அவர் எடுத்துக் கொண்டது கிடையாது. கடந்த 10 ஆண்டுகளாக அவர் பட்டர் சிக்கன் சாப்பிட்டது கூட கிடையாது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இது போல் விராட் கோலிக்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியம். அதில் அவர் சமரசமே செய்ய மாட்டார்.
சரியான நேரம் தூங்க வேண்டும் என்பதில் விராட் கோலி உறுதியாக இருப்பார். தூக்கம் சரியாக இருந்தால் மட்டுமே நம்மால் சிறந்த முறையில் செயல்பட முடியும். தூக்கத்தை மட்டும் தான் நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும் என்று விராட் கோலி என்னிடம் எப்போதும் சொல்வார். உணவு பழக்கங்கள், உடற்பயிற்சிகளை விராட் கோலி தொடர்ந்து செய்வதால் தான் இன்று அவர் உலகின் சிறந்த விளையாட்டு வீரராக மட்டுமல்லாமல் மற்ற நபர்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும் நபராக இருக்கிறார் என்று அனுஷ்கா ஷர்மா கூறியுள்ளார்.