பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில், அதற்கான பேட்டிங் பயிற்சியின் போது விராட் கோலி ஆட்டமிழந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. ஜூன் மாதத்திற்கு பின் சுமார் 5 மாதங்கள் ஓய்வில் இருந்த விராட் கோலி, நாளை மறுநாள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. ஏற்கனவே இந்திய அணி வீரர்கள் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தரையிறங்கிவிட்டனர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை பார்க்க அதிகளவில் ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். அதிலும் விராட் கோலியிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதற்கு பெரியளவில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அதற்கேற்ப ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும், விராட் கோலியை கடைசியாக ஆஸ்திரேலியா மண்ணில் பார்க்க ஆவலாக இருக்கிறீர்களா? என்று விளம்பரங்களை செய்து வருகிறது.
இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்களிடையே விராட் கோலி மேனியா என்ற வைரஸ் பரவி வருவதாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு விராட் கோலியை பார்க்க ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த நிலையில் விராட் கோலியின் பயிற்சி வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
பேட்டிங் பயிற்சியின் போது விராட் கோலி எதிர்கொண்ட பந்து, பேட்டில் எட்ஜாகி ஸ்டம்பை தகர்த்தது. இதனால் விராட் கோலி சோகம் அடைந்தார். அப்படி விக்கெட் கொடுப்பது விராட் கோலிக்கு முதல்முறையல்ல. ஏனென்றால் 2023 உலகக்கோப்பைத் தொடரில் கம்மின்ஸ் பந்தில் விராட் கோலி அப்படிதான் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஐபிஎல் தொடருக்கு பின் சுமார் 5 மாதங்களாக ஓய்வில் இருக்கும் விராட் கோலி, நாளை மறுநாள் இந்திய ஜெர்சி அணிந்து களமிறங்க உள்ளார். இதனால் விராட் கோலி சிறந்த இன்னிங்ஸை ஆட வேண்டும் என்று ரசிகர்கள் இப்போதே பிரார்த்தனை செய்ய தொடங்கியுள்ளனர். ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை விராட் கோலி, சச்சின் டெண்டுல்கருக்கு பின் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.