
இந்தியா பேட்டிங்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்டில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து புஜாரா - கோலி இணைந்து விக்கெட் பறிபோகாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சோதித்து வந்தனர்.

மெய்டன் ஓவர்கள்
இருவரும் நிறைய டாட் பால், மெய்டன் ஓவர்கள் ஆடி ஆஸ்திரேலிய அணியை வெறுப்பேற்றினர். புஜாரா 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின் சற்று முன்னேறி அவ்வப்போது பவுண்டரி அடிக்கத் துவங்கினார் கோலி.

அரைசதம்
அரைசதம் கடந்து சிறப்பாக ஆடி வந்தார் கோலி. ரஹானே அவருக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடி வந்தார். 77வது ஓவரின் கடைசி பந்தை மிட்-ஆஃப் திசையில் அடித்த ரஹானே ரன் ஓட முயன்றார். கோலி, ரஹானே ரன் ஓடி வருவதை கண்டு உடனே ரன் ஓடிச் சென்றார்.

பின் வாங்கிய ரஹானே
பந்து கோலிக்கு பின் சென்றதால் அவரால் பந்து செல்வதை பார்க்க முடியவில்லை. எனவே, அவர் ரஹானே ரன் ஓடலாம் என சொன்னதை நம்பி ஓடினார். ஆனால், பந்து ஹேசல்வுட் கையில் சிக்கியது. அவர் பந்தை பீல்டிங் செய்ததை பார்த்த ரஹானே ரன் ஓடாமல் பின் வாங்கினார்.

மன்னிப்பு
பாதி தூரம் ஓடி இருந்த கோலி வேறு வழியின்றி மீண்டும் தன் இடத்துக்கு ஓடி வர முயன்றார். அதற்குள் லியோன் பந்தை பிடித்து ரன் அவுட் செய்தார். அப்போது ரஹானே களத்திலேயே, கோலியிடம் மன்னிப்பு கேட்டார். எனினும், கோலி கோபத்தில் இருந்தார்.

என்ன செய்தார்?
பெவிலியன் திரும்பிய அவர் கிளவுஸை எறிந்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். கோலி ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் சதம் அடிக்கவும் வாய்ப்பு இருந்தது. ஆனால், ரஹானே ரன் அவுட்டால் இந்தியா முக்கிய விக்கெட்டை இழந்தது.

இந்தியா தடுமாற்றம்
விராட் கோலி விக்கெட்டை இழந்த இந்திய அணி அடுத்து ரஹானே, ஹனுமா விஹாரி விக்கெட்டையும் இழந்து ஆட்ட நேர முடிவில் 233 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்தது. இந்திய அணி 250 ரன்களை கடப்பதே கடினம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications