அடிலெய்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் அசத்துவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தாலும், கேஎல் ராகுல் - சுப்மன் கில் கூட்டணி மிகச்சிறப்பாக பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியது.

2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த நிலையில், கேஎல் ராகுலின் பேட்டில் இருந்து விரைவாக ரன்கள் வரத் தொடங்கியது. இதனால் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல், 64 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 37 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மிட்சல் ஸ்டார்க் பந்தை லீவ் செய்ய முயற்சித்த போது, எதிர்பாராத வகையில் பேட்டில் அடித்து ஸ்லிப் திசையில் கேட்சானது.
இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை கேஎல் ராகுல் விளையாடிய 3 இன்னிங்ஸ்களிலும் மிட்சல் ஸ்டார்க் பந்தில் தான் ஆட்டமிழந்திருக்கிறார். இதன்பின் நட்சத்திர வீரர் விராட் கோலி களம் புகுந்தார். அடிலெய்ட் மைதானத்தில் விராட் கோலி 5 சதங்களை விளாசி இருப்பதால், அவர் மீண்டும் ஒரு அற்புதமான இன்னிங்ஸை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மிட்சல் ஸ்டார்க் வீசிய அடுத்த ஓவரிலேயே எக்ஸ்ட்ரா பவுன்ஸில் ஏமாற்றமடைந்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் விராட் கோலி 7 ரன்களில் நடையை கட்டினார். எப்படி பெர்த் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தாரோ, அதேபோல் மீண்டும் விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்தனர். விராட் கோலி விக்கெட்டை பறிகொடுத்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் போலண்ட் பந்தில் சுப்மன் கில் 51 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்கு 15 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், அடுத்தடுத்து இந்திய அணி 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பறிகொடுத்தது.
இதனால் முதல் செஷனில் இந்திய அணி 82 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிட்சின் சில பகுதிகளில் கிடைத்த எக்ஸ்ட்ரா பவுன்ஸை வைத்து ஆஸ்திரேலியா பவுலர்கள் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகப்பெரிய நெருக்கடியை இந்திய அணிக்கு கொடுத்திருப்பது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.