செண்ட் லூசியா: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். காற்றின் திசையை அனுமானித்து ஹேசல்வுட் வீசிய ஷார்ட் பாலை எதிர்பார்க்காத விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. வாழ்வா, சாவா போட்டியில் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆஸ்திரேலியா அணியில் அகர் நீக்கப்பட்டு மிட்சல் மார்ஷ் சேர்க்கப்பட்டார். இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமம் இருப்பதால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்பட்டது. இதன்பின் இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
வழக்கம் போல் மிட்சல் ஸ்டார்க் முதல் ஓவரை வீச, ரோகித் சர்மா எதிர்கொண்டார். அந்த ஓவரில் 5 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 2வது ஓவரை வீச ஹேசல்வுட் அழைக்கப்பட்டார். ஏற்கனவே விராட் கோலி முதல் ஓவரில் 2 டாட் பால்களை ஆடிய நிலையில், ஹேசல்வுட் ஓவரிலும் 2 டாட் பால்களை ஆடியிருந்தார். இதனால் முதல் ரன்னை எடுக்க வேண்டிய பிரஷர் விராட் கோலி ஏற்பட்டது.
அப்போது காற்று ஆஃப் சைட் திசையில் பலமாக வீசிய போது, ஹேசல்வுட் சரியாக விராட் கோலியின் தோளிற்கு குறி வைத்து ஷார்ட் பாலை வீசினார். இதனை எதிர்பார்க்காத விராட் கோலி, புல் ஷாட்டை அடித்தார். அந்த பந்து ஒய்டு மிட் ஆன் திசையில் மேலே பறக்க, கிட்டத்தட்ட 26 மீட்டர் தூரம் ஓடி சென்ற ஆஸ்திரேலியா வீரர் டிம் டேவிட் அந்த கேட்சை பிடித்தார். இதனால் விராட் கோலி 5 பந்துகளில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி வரும் விராட் கோலி, ஒருமுறை கூட அரைசதத்தை எட்டவில்லை. நியூயார்க் மைதானத்தில் ஆடிய 3 போட்டிகளில் மொத்தமாகவே 5 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த விராட் கோலி, கடந்த 2 போட்டிகளாக ஓரளவிற்கு ஃபார்முக்கு வந்திருந்தார். ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் டக் அவுட்டாகி இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.