மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது இதில் இந்திய அணியில் நட்சத்திர வீரரான விராட் கோலி 8 பந்துகளை எதிர் கொண்டு டக் அவுட் ஆனார். இதன் மூலம் பலரும் விராட் கோலி தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், உடல் தகுதி என்பது வேறு போட்டிகளில் விளையாடிய நேரம் என்பது வேறு. இதனால் தான் ரோகித் சர்மா முதல் ஒருநாள் போட்டியில் கொஞ்சம் பேட்டிங் செய்ய தடுமாறினார்.

விராட் கோலியை பொறுத்தவரை பார்டர் கவாஸ்கர் தொடரில் அவருக்கு கிடைத்த மோசமான அனுபவம் மீண்டும் அவரை துரத்துகிறது என நினைக்கின்றேன். ஆனால் அடிலெய்ட் மற்றும் சிட்னி மைதானங்களில் இப்படி எதுவும் நடக்காது என நான் நம்பிக்கை கொள்கின்றேன்.
ராகுல் முதல் ஒருநாள் போட்டியில் நன்றாக விளையாடினார். ஸ்ரேயாஸ் ஒரு நெருக்கடியான கட்டத்தில் சிக்கிக்கொண்டார். பேட்டிங் யுத்தியில் ஸ்ரேயாஸ், கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கின்றேன். எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அதனை அக்சர் பட்டேல், சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு தொடருக்கு நாம் முன்பாகவே அங்கு சென்று பயிற்சி செய்ய வேண்டும். சில பயிற்சி ஆட்டங்களில் விளையாட வேண்டும். இந்திய அணிக்கு எப்போதுமே ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் நெருக்கடியை தரும். எனவே இந்த சவால்களை சமாளிக்க வேண்டும் என்றால் நாம் முன்பே அங்கு சென்று பயிற்சி செய்ய வேண்டும்.
ஏனென்றால் கள சூழல் எளிதாக இருக்காது. நமது பவுலர்களும் சரியான நேரத்தில் பந்து வீச பழகிருக்க மாட்டார்கள். பேட்ஸ்மேன்களும் ஆடுகளத்தில் இருக்கும் பவுன்சை சமாளிக்க முடியாமல் தடுமாறுவார்கள். ஒன்று அல்லது இரண்டு பயிற்சி ஆட்டங்களில் நாம் அங்கு விளையாடி இருந்தால் இந்த தவறு எல்லாம் நாம் முன்பே சரி செய்து இருக்க முடியும்.இந்த தவறு போட்டியில் நடக்காமல் கூட இருந்திருக்கும். எனவே அடுத்தடுத்த தொடர்களில் நாம் இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.