பெர்த்: ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் வெளியாகும் ஒவ்வொரு பத்திரிகையின் கடைசி பக்கத்திலும் விராட் கோலி மட்டும் நிரம்பி இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக நட்சத்திர ஆல்ரவுண்டர் மிட்சல் மார்ஷ் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் விராட் கோலி எங்களை ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், இம்முறை அவரை சைலண்ட்-டாக வைத்திருப்போம் என்று கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் தயாரிப்பு பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறது. அதேபோல் பார்டர் கவாஸ்கர் கோப்பையை விளம்பரப்படுத்தும் பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த சீசனிலும் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் விளம்பர நாயகனாக விராட் கோலி தான் இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், பேட் கம்மின்ஸ் உள்ளிட்டோரை காட்டிலும் விராட் கோலியை அந்நாட்டு பத்திரிகைகள் அதிகமாக கொண்டாடி வருகின்றன. இதற்கு விராட் கோலியின் பேட்டிங் சாதனைகளே காரணமாக கூறப்பட்டு வருகிறது.
ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, இதுவரை 6 சதங்கள், 4 அரைசதங்கள் உட்பட 1,352 ரன்களை விளாசி இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி வெறும் 93 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தாலும், ஆஸ்திரேலியாவில் நிச்சயம் பீஸ்ட் மோடில் விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இதனிடையே விராட் கோலியை ஆஸ்திரேலியா பத்திரிகைகள் கொண்டாடுவது அந்த அணியின் மிட்சல் மார்ஷ்-க்கு கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மிட்சல் மார்ஷ் பேசுகையில், ஒவ்வொரு நாளும் ஆஸ்திரேலியன் பத்திரிகைகளில் விராட் கோலியின் புகைப்படத்தையும், அவர் குறித்த கட்டுரைகளையும் பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது. அந்த அளவிற்கு விராட் கோலி மரியாதையை பெற்றுள்ளார் என்று கருதுகிறேன்.
பத்திரிகைகள் விராட் கோலியை பற்றி எழுதுவதை பார்க்கும் போது, கால்பந்து வீரர் ஹார்லி ரெய்ட் தான் நினைவுக்கு வருகிறார். தற்கால ஹார்லி ரெய்ட்-ஆக விராட் கோலியை பார்க்கிறேன். மேற்கு ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு பத்திரிகையின் கடைசி பக்கத்திலும் விராட் கோலி மட்டுமே இருக்கிறார். நிச்சயமாக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர் தான்.
சிறப்பாக விளையாடாமல் அந்த இடத்தை எட்டியிருக்க முடியாது. எங்களுக்கும் விராட் கோலி மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. ஆனால் இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி நிச்சயம் சைலண்ட்-டாக வைத்திருப்போம் என்று நம்புகிறேன். கடந்த காலங்களில் விராட் கோலி ஆஸ்திரேலியா மண்ணில் எங்களை ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார். ஆனால் இம்முறை நடப்பாமல் பார்த்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.