மெல்போர்ன்: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான பும்ராவின் பவுலிங்கில் ரிவர்ஸ் ராம்ப் ஷாட் ஆடியதை பார்த்து ஓய்வறையில் இருந்த தனக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் வீரர் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டியுள்ளார். சாம் கோன்ஸ்டாஸ் குறித்து பெரிதாக தெரியாது என்று கூறிய அவர், ஒரே நாளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
ஓராண்டாக ஃபார்மில் இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வந்த ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணிக்கு எதிராக அடுத்தடுத்து 2 சதங்களை விளாசி மிரட்டியுள்ளார். காபாவில் அடித்த சதத்தை விடவும், மெல்போர்னில் கூடுதல் மன உறுதியுடன் இந்திய அணியை பவுலிங்கை எதிர்கொண்டார் ஸ்டீவ் ஸ்மித். அதன் பலனாக 140 ரன்களை குவித்து, ஆஸ்திரேலியா 474 ரன்கள் சேர்க்க காரணமாக அமைந்தார்.

இதற்கு அடித்தளமாக அமைந்தது அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸ்-ன் அதிரடியான ஆட்டம் தான். பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் என்று மூவரையும் அதிரடியாக விளாசிய அவர், 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். இதனை பயன்படுத்தி கொண்டு கவாஜா, லபுஷேன் உள்ளிட்டோரும் அரைசதம் அடித்து ஃபார்முக்கு திரும்பினர். இந்த நிலையில் 2வது நாள் முடிவில் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் கைகள் ஓங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில், 19 வயதான சாம் கோன்ஸ்டாஸ் குறித்து பெரிதாக எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவரின் ஆட்டத்தை நேற்று பார்த்துவிட்டோம். பும்ராவை ரிவர்ஸ் ராம்ப் ஷாட் மூலம் சிக்ஸ் அடித்த போது, ஓய்வறையில் இருந்த எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது. ஆனால் அவரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவருக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இந்திய அணி குறித்த கேள்விக்கு, விராட் கோலியின் ஆட்டம் இன்று மிகச்சரியாக இருந்தது. அவரால் அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை எளிதாக கையாள முடிந்தது. பவுலர்கள் அவரை நோக்கி வருவதற்காக காத்திருந்து ரன்களை சேர்த்தார். லெக் சைடு மற்றும் பவுன்சர் பந்துகளிலும் எளிதாக ரன்களை சேர்த்தார். அவரின் ஆட்டம் ஒரு மாஸ்டர் கிளாஸை கவனிப்பது போல் இருந்தது.
அந்த ரன் அவுட்டை பொறுத்தவரை, ஜெய்ஸ்வால் தான் அந்த ரன்னுக்கு அழைத்தார். ஆனால் விராட் கோலி வேண்டாம் என்று நிறுத்தியதை பார்த்தேன். அதன்பின் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. சிறந்த பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், அதனை எங்களால் உடைக்க முடிந்தது மகிழ்ச்சி. அதன்பின் கூடுதலாக 2 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. மொத்தமாக 2வது நாள் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.