மும்பை: 2027 உலகக்கோப்பை தொடரில் விளையாட விராட் கோலி அதிக ஆர்வத்துடன் இருப்பதாக ஆர்சிபி அணியின் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். லண்டனில் ஓய்வில் இருந்த போதும் ஒவ்வொரு வாரமும் பேட்டிங் பயிற்சியில் விராட் கோலி ஈடுபட்டதாக கூறிய தினேஷ் கார்த்திக், அழுத்தமான சூழல்களின் போது விராட் கோலியின் அங்கு இருந்தால், ஓய்வறையில் வீரர்களால் நிதானமாக இருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. ஏற்கனவே இந்திய அணி புறப்பட்டு மெல்போர்னில் தரையிறங்கிவிட்ட நிலையில், நாளை முதல் வீரர்கள் பயிற்சியை தொடங்க உள்ளனர். சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இளம் கேப்டன் சுப்மன் கில் கீழ் விளையாட இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே 2027 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடுவது சந்தேகம் என்ற கூறப்பட்டு வருகிறது. இருவருமே உலகக்கோப்பை தொடரில் விளையாட முனைப்பு காட்டவில்லை என்று அஜித் அகர்கர் கூறியுள்ளார். இதனால் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருடன் ரோகித் சர்மா அல்லது விராட் கோலி ஆகியோரில் ஒருவர் ஓய்வை அறிவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் 2027 உலகக்கோப்பை தொடரில் விளையாட விராட் கோலி ஆர்வமுடன் இருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணியின் ஆலோசகரும், பேட்டிங் பயிற்சியாளருமான தினேஷ் கார்த்திக் பேசுகையில், 2027 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி விளையாட மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார். அதன் காரணமாகவே லண்டனில் ஓய்வில் இருந்த போதும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
ஒவ்வொரு வாரமும் 2 அல்லது 3 செஷன்கள் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். 2027 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்பதில் விராட் கோலி தீவிரமாக இருக்கிறார் என்றும் சொல்லலாம். விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தாலும், பயிற்சியில் இருந்து பிரேக் எடுக்கவில்லை. இதன் மூலமாக விராட் கோலி 2027 உலகக்கோப்பை தொடரில் விளையாட முடிவு செய்துள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
விராட் கோலி இரு இடத்தில் இருந்தால், அந்த இடத்தில் டென்ஷன் குறைவாக இருக்கும். ஓய்வறையில் நிதானமாக இருப்பார்கள். ஏனென்றால் அழுத்தமான சூழல்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை விராட் கோலி நன்றாக அறிவார். அதனை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தும் வருகிறார். மீண்டும் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.