டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு விவாதங்களும், சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
குறிப்பாக ரோகித் சர்மா இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின் கில் அந்த பதவியில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதேபோன்று விராட் கோலிய்யும்,ரோகித் சர்மாவும் அடுத்த 2027 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதனால் ஆஸ்திரேலிய தொடர் இந்த இரண்டு வீரர்களுக்கும் மிகவும் முக்கிய தொடராக அமைந்துள்ளது. மேலும் ஐபிஎல் தொடருக்கு பிறகு இவ்விரு வீரர்களும் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. ரோஹித் சர்மா, தன்னுடைய உடல் தகுதியை மெருகேற்றும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் விராட் கோலி நேற்றுதான் லண்டனில் இருந்து டெல்லி வந்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றனர். டெல்லி விமான நிலையத்தில் அணி பேருந்து வந்தபோது ஏராளமான மக்கள் விமான நிலையத்தின் முன் கூடியிருந்தனர். அப்போது ஏழு வயது சிறுவன் ஒருவன் விராட் கோலியின் போஸ்டரை வைத்துக்கொண்டு அதில் கையெழுத்து வாங்குவதற்காக காத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் பாதுகாவலர்கள் அவரைவிட வில்லை. இதை பேருந்தில் இருந்து கவனித்த விராட் கோலி அணி நிர்வாகிகளிடம் கூறி அந்தப் பையனின் போஸ்டரை வாங்கி வர சொன்னார். இதை அடுத்து அந்த போஸ்டரை பாதுகாவலர்கள் வாங்கி வந்து விராட் கோலியிடம் கொடுத்தனர். அதில், கையெழுத்து போட்டு மீண்டும் கோலி கொடுத்தார்.
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத சிறுவன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான். இந்திய அணி வரும் முதல் ஒரு நாள் போட்டி 19ஆம் தேதி பெர்த் நகரில் விளையாடுகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி 23ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 25ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும்