அடிலெய்ட்: அடிலெய்ட் மைதானத்தில் நடக்கவுள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு மிகப்பெரிய சாதனையை படைக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் 102 ரன்கள் விளாசினால், அடிலெய்ட் மைதானத்தில் அதிக ரன்களை விளாசிய வெளிநாட்டு வீரர் என்ற லாராவின் சாதனையை விராட் கோலியால் முறியடிக்க முடியும்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விராட் கோலி வெறும் 93 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதனால் ஃபார்ம் அவுட்டில் இருக்கும் விராட் கோலியால் ஆஸ்திரேலியா மண்ணில் கம்மின்ஸ், ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட்டை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்தது.

ஆனால் ரசிகர்களின் சந்தேகத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே விராட் கோலி அபார சதத்தை விளாசி அசத்தினார். இந்த சதத்தின் மூலமாக ஆஸ்திரேலியா மண்ணில் அதிக சதங்களை விளாசிய வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்திருக்கிறார்.
3 வடிவங்களிலும் சேர்த்து மொத்தமாக 10 சதங்களை விராட் கோலி ஆஸ்திரேலியா மண்ணில் அடித்திருக்கிறார். இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடக்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பிங்க் பாலில் பயிற்சி மேற்கொண்டு தயாராகி வருகின்றனர். அடிலெய்ட் மைதானத்தை பொறுத்தவரை விராட் கோலியின் கோட்டையாக சொல்ல முடியும்.
ஏனென்றால் 3 வடிவங்களிலும் சேர்த்து அடிலெய்ட் மைதானத்தில் 11 இன்னிங்ஸ்களில் விளையாடி 5 சதங்கள் உட்பட 973 ரன்களை விளாசி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை அடிலெய்ட் மைதானத்தில் மட்டும் 509 ரன்களை விராட் கோலி சேர்த்துள்ளார். இதுவரை அடிலெய்ட் மைதானத்தில் வெளிநாட்டை சேர்ந்த வீரர்களில் அதிக ரன்களை விளாசியவர்கள் பட்டியலில் லாரா முதலிடத்தில் உள்ளார்.
அவர் அடிலெய்ட் மைதானத்தில் மட்டும் 610 ரன்களை அடித்துள்ளார். இவருக்கு பின் 2வது இடத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் 552 ரன்களை சேர்த்துள்ளார். இவர்களுக்கு பின்னர் 3வது இடத்தில் விராட் கோலி இருக்கிறார். இதனால் அடிலெய்டில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 102 ரன்களை விளாசினால், அந்த மைதானத்தில் அதிக ரன்களை விளாசிய வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை விராட் கோலியால் படைக்க முடியும்.
ஏற்கனவே ஃபார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி, அடிலெய்ட் மைதானத்தில் விளையாடி அடுத்தக் கட்ட ஃபார்மை எட்டுவதற்கு ஆவலாக இருக்கிறார். இதனால் பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலியின் ஆதிக்கம் ஆஸ்திரேலியா அணி மீது தொடரும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.