பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 3 ரன்களில் ஆட்டம் இழந்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி யார் தயவும் இன்றி செல்ல வேண்டும் என்றால் அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். இந்த சூழலில் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் குவித்து இருக்கிறது.

இந்திய அணி களம் இறங்கிய போது, தொடக்க வீர ஜெய்ஸ்வால் நான்கு ரன்களிலும், கில் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க இந்திய அணி 6 ரன்கள் சேர்ப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் ராகுல்,விராட் கோலி ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்பார்கள் என காலை ஐந்தரை மணிக்கு அலாரம் வைத்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.
முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து பார்ம்க்கு திரும்பிய விராட் கோலி, அதன் பிறகு பழைய குருடி கதவை திறடி என்பது போல் தொடர்ந்து தடுமாறி வருகிறார். 16 பந்துகளை எதிர்கொண்ட கோலி வெறும் 3 ரன்களில் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 22 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
இந்திய அணியின் முக்கிய வீரர்களான கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்த தொடரில் நன்றாக ரன்கள் சேர்த்தால் மட்டுமே அவர்களால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடியும். ஆனால் இருவரும் தடுமாறி வருகின்றனர். கோலியாவது ஒரு சதம் அடித்து விட்டதால் எஸ்கேப் ஆகி விடுவார்.
ஆனால் ரோகித் கதை தான் பாவம்.இதனால் தற்போது ரோகித் சர்மா கேப்டன் இன்னிங்ஸை ஆட வேண்டும் என்று நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்தால் மட்டுமே இந்த போட்டியில் ஒரு அளவாவது டிரா செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.