ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஸ்மித் லாபஸ்செனிடம் கேட்ச் ஆன விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது அவுட்டுதான் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் உறுதியாக நம்பும் நிலையில், மூன்றாம் நடுவர் இதனை நாட் அவுட் என அறிவித்திருக்கிறார்.
ஸ்மித் கேட்சை பிடிக்கும் போது பந்து மைதானத்தில் லேசாகப்பட்டது வீடியோவில் தெரிய வந்தது. எனினும் ஸ்மித் தம்மால் கேட்சை பிடிக்க முடியாது என தெரிந்தவுடன், பந்தை தூக்கி லாபஸ்செனிடம் எறிந்தார்.

அதனை லாபஸ்சென் பிடித்தார். இதனால், இந்த கேட்சை முதலில் ஸ்மித் பிடிக்கவில்லை. வீடியோவிலும் பந்து தரையில் பட்டது தெரியவந்தது. எனினும் ஆஸ்திரேலியா ஊடகங்கள் இதனை அவுட் தான் என்று அழுகுனி ஆட்டம் ஆடி வருகிறார்கள். இது குறித்து இடைவெளியின் போது பேசிய ஸ்மித், 100 சதவீதம் அது கேட்ச் தான்.
இதை மறுப்பதற்கு இல்லை. யார் என்ன சொன்னாலும் அந்த கேட்ச்சை நான் நூறு சதவீதம் பிடித்தேன். ஆனால் நடுவர்கள் முடிவு எடுத்து விட்டார்கள். எனவே நாங்கள் அதை விட்டு நகர்ந்து சென்று விட்டோம். என ஸ்மித் கூறினார். இந்த நிலையில் இது அவுட்டா இல்லையா என்பது குறித்து முன்னாள் நடுவர் சைமன் டஃபில் விளக்கம் அளித்து இருக்கிறார்.
அதில், யார் எந்த அணிக்கு ஆதரவாக இருக்கிறார்களோ. அவர்கள் தங்களுக்கு தகுந்தார் மாதிரி மூன்றாம் நடுவர் முடிவை அறிவிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் மூன்றாம் நடுவர் ரிப்ளே பார்க்கும் போதே அவர் என்ன நினைத்தார் என்று தெரிகிறது. பந்து அடியில் விரல்கள் இருந்தாலும், பந்து கீழே படுகிறது என்பதை மூன்றாம் நடுவர் வீடியோ ஆதாரம் மூலம் கூறியிருக்கிறார்.
இது போன்ற காட்சிகள் மூன்றாம் நடுவர் இரண்டு விஷயங்களை பார்ப்பார். ஒன்று பந்து கீழ் விரல்கள் இருக்கிறதா என்று பார்த்து அது அவருக்கு மனநிறைவை கொடுத்தால் அவுட் என்று கூறுவார். ஆனால் பந்து தரையில் படுகிறது என்பதை அவர் கண்டால் அதனை உறுதி செய்து கொண்டு நாட் அவுட் என்று கூறுவார்.இந்த விவகாரத்தில் பந்து கீழே பட்டது என்பதை மூன்றாம் நடுவர் பார்த்திருக்கிறார்.
அதனால் தான் இதற்கு நாட் அவுட் என வழங்கி இருக்கிறார். ஆனால் ஐசிசி விதியின் படி பந்தின் கீழே விரல்கள் இருந்தாலே அது கேட்ச் தான் என்று கூறுகிறது. ஆனால் முன்பெல்லாம் கள நடுவர் அவுட்டா இல்லையா என சாப்ட் சிக்னல் வழங்குவார். அதை வைத்து மூன்றாம் நடுவர் முடிவு எடுப்பார். இப்போது ஷாப்ட் சிக்னல் வழங்கப்படுவது இல்லை என்பதால் மூன்றாம் நடுவரின் முடிவே இறுதியானது என்று சைமன் டஃபில் கூறியிருக்கிறார்.