துபாய்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா சிக்சர் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்த போது, ஓய்வறையில் இருந்த விராட் கோலி அருகில் இருந்த பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார். அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் குறித்து முழு தகவலும் வெளி வந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தொடர்ந்து 3வது முறையாக தகுதிபெற்று சாதனை படைத்துள்ளது. 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தோல்விக்கு பழிவாங்கும் வகையில் இந்திய அணியின் வெற்றி அமைந்துள்ளது.

இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அல்லது தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதிபெற வாய்ப்புகள் உள்ளது. இதனால் இம்முறை சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி நிச்சயம் கைப்பற்றும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இதனிடையே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் சிறந்த பங்களிப்பை வழங்கினர்.
குறிப்பாக விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறிய பின், களம் புகுந்த ஹர்திக் பாண்டியா கொஞ்சம் கூட அழுத்தத்தை பற்றி கவலைப்படாமல் ஆடம் ஜாம்பா பவுலிங்கில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். அதிலும் நேதன் எல்லீஸ் வீசிய ஒரு ஓவரில் ஒரேயொரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டிருந்தது.
இதனால் இந்திய அணிக்கு கட்டாயம் பவுண்டரி தேவைப்பட்டது. அந்த நேரத்தில் ஹர்திக் பாண்டியா 106 மீட்டர் தூரத்திற்கு ஒரு சிக்சரும், 101 மீட்டர் தூரத்திற்கு 2வது சிக்சரையும் விளாசி தள்ளினார். சிறப்பாக ஆடிய அவர் மீண்டும் சிக்சர் அடிக்கும் முயற்சியில் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது பயிற்சியாளர் கம்பீரின் காதுகளில் விராட் கோலி உற்சாகமாக ஏதோ சில வார்த்தைகளை கூறினார்.
தற்போது விராட் கோலி கம்பீரிடம் என்ன சொன்னார் என்பது தெரிய வந்துள்ளது. அப்போது விராட் கோலி, Maarne bass chakke hi jaa raha என்று இந்தியில் கூறினார். அதற்கு, "எந்த நேரத்தில் சிக்ஸ் அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்" என்பதே பொருளாகும். இதனைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவை உற்சாகமாக வரவேற்ற விராட் கோலி, வெற்றிக்கு பின் அவரை கட்டிபிடித்து கொண்டாடினார்.