மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தேவையில்லாத விரோதத்தை வளர்த்துக் கொண்டார். இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வரலாற்றில் யாருக்குமே கிடைக்காத ஒரு விஷயம் விராட் கோலிக்கு இன்று நடந்திருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்றாலே களத்தில் மிகவும் நல்ல முறையில் நடந்து கொண்டு ரசிகர்களுக்கு பிடித்த மனிதராக இருப்பார்கள். இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்திய வீரர்கள் உலகில் எங்கு சென்றாலும் அவர்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கும்.

உதாரணத்திற்கு நியூசிலாந்தில் தனது மகனுக்கு அந்நாட்டு ரசிகர் ஒருவர், சச்சின் டெண்டுல்கர் என பெயர் வைக்கும் அளவுக்கு அந்த மரியாதை இருந்தது.உலக கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள் என போற்றப்படும் கவாஸ்கர், சச்சின், தோனி, ஷேவாக், டிராவிட் போன்ற வீரர்கள் எல்லாம் களத்திற்கு வந்தாலே வெளிநாட்டு ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை கொடுப்பார்கள்.
ஏனென்றால் உண்மையான திறமைக்கு எப்போதுமே வெளிநாட்டினர் வரவேற்பும் மரியாதையும் தருவார்கள். இந்த சூழலில் விராட் கோலிக்கும் இந்த மரியாதை முன்பு கிடைத்திருக்கிறது. ஆனால் விராட் கோலி நான்காவது டெஸ்ட் போட்டியில் 19 வயது வீரர் கோன்ஸ்டாசிடம் மோதலில் ஈடுபட்டது ஆஸ்திரேலிய ரசிகர்களை வெறுப்படைய செய்திருக்கிறது.
அது மட்டுமில்லாமல் விமான நிலையத்தில் பெண் பத்திரிகையாளர்களை புகைப்படம் எடுக்காதீர்கள் என கோலி கூறிய விதமும், அந்நாட்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. இதனால் இன்று விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தபோது ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களும் அவருக்கு எதிராக கூக்குரல் எழுப்பினர். இதனை பார்த்து கடுப்பான இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவருக்கு வரவேற்பு குரல் கொடுத்தனர்.
ஆனால் இதை எல்லாம் கண்டுகொள்ளாத விராட் கோலி எப்போதும் போல் ரன் எடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் களத்திற்குள் வந்தார். இந்தியாவின் பவுலர்களுக்கு இதுபோல் எதிர்ப்பு வரலாற்றில் பதிவாகி இருந்தாலும், ஜாம்பவான் வீரர்களுக்கு இதுபோல் எதிர்ப்பு கிளம்பி இருப்பது இதுவே முதல் முறையாகும்.