பெர்த்: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் விராட் கோலி கம்பேக் கொடுப்பார் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியானது. விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்வில் மறக்க நினைக்கும் ஒரு சோகமான சாதனையை ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் தனது 30-வது ஒருநாள் இன்னிங்ஸில், முதன்முறையாக 'டக் அவுட்' ஆகி, கோலி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பிய காட்சி, இந்திய ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கினார் விராட் கோலி. இந்திய அணி 13 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், கோலி அணியை மீட்டெடுப்பார் என்று ரசிகர்கள் நம்பினர்.
ஆட்டத்தின் 7-வது ஓவரை ஆஸ்திரேலியாவின் அதிவேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை, ஸ்டார்க் ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே, டிரைவ் செய்ய வைக்கும் வகையில் வீசினார்.
ஏற்கனவே எட்டு மாதங்களாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடாததால், ஆட்டத்திற்குள் வரத் துடித்துக் கொண்டிருந்த கோலி, அந்தப் பந்தை விரட்டிச் சென்று, ஒரு பவர்ஃபுல் டிரைவ் ஆட முயன்றார். ஆனால், பந்து அவரது பேட்டின் வெளிப்புற விளிம்பில் பட்டு, பேக்வர்டு பாயிண்ட் திசையில் பறந்தது.
அங்கு, ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த கூப்பர் கொனோலி, தனது இடதுபுறம் பாய்ந்து, ஒரு நம்பமுடியாத, அபாரமான கேட்சைப் பிடித்தார். ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, 8 பந்துகளைச் சந்தித்து, ரன் ஏதும் எடுக்காமல், விராட் கோலி 'டக் அவுட்' ஆகி, நொந்து போய் பெவிலியன் திரும்பினார்.

இந்த 'டக் அவுட்', கோலியின் கிரிக்கெட் வாழ்வில் ஒரு கரும்புள்ளியாகப் பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில், ஒருநாள் போட்டிகளில் அவர் ஆடிய 30 இன்னிங்ஸ்களில், இதுவே அவரது முதல் 'டக் அவுட்' ஆகும். சர்வதேச கிரிக்கெட்டில், விராட் கோலியை இரண்டு முறை 'டக் அவுட்' ஆக்கிய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
ரோஹித் மற்றும் கோலி என இருபெரும் வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இந்திய அணி பெரும் சரிவைச் சந்தித்தது. சிறிது நேரத்திலேயே கேப்டன் சுப்மன் கில்லும் (10) ஆட்டமிழக்க, இந்திய அணி 8.5 ஓவர்களில் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது மட்டுமே சற்று ஆறுதலாக அமைந்தது
எட்டு மாதங்களுக்குப் பிறகு, தங்களது கிரிக்கெட் ஹீரோக்களின் ஆட்டத்தைக் காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த முதல் போட்டியே ஒரு பெரும் அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுத்துள்ளது. கோலி மற்றும் ரோஹித்தின் இந்த அடுத்தடுத்த ஆட்டமிழப்புகள், அவர்களின் எதிர்காலம் குறித்த விவாதங்களை மேலும் தீவிரமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.