பெர்த் : இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அபாரமாக விளையாடி புதிய மைல்கல் ஒன்றைத் தொட்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் விராட் கோலி தற்போது பார்முக்கு திரும்பியிருக்கிறார். விராட் கோலி கடைசியாக நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூரு டெஸ்ட் போட்டியில் 70 ரன்கள் எடுத்தார்.
அதன் பிறகு 1, 17, 4, 1,5 ஆகிய ரன்கள் தான் விராட் கோலி அடித்திருந்தார். பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி பெரிய ஸ்கோரை அடித்தால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும்.

இந்த தருணத்தில் விராட் கோலி ஐந்து இன்னிங்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அரை சதம் அடித்திருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி புதிய மைல்கல் ஒன்றைத் தொட்டிருக்கிறார். பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி 2000 ரன்களை அடித்திருக்கிறார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ,ராகுல் டிராவிட், லட்சுமணன், புஜாரா,மைக்கேல் கிளார்க் ஆகியோருக்கு பிறகு இந்த தொடரில் 2000 ரன்கள் அடிக்கும் ஏழாவது வீரர் என்ற பெருமை விராட் கோலிக்கு கிடைத்திருக்கிறது.
இதேபோன்று சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையும் விராட் கோலி பெற்றிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 13 முறையும், விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் வீரர் ஜாகிர் அப்பாஸ் ஆகியோர் தலா 11 முறையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 ரன்களுக்கு மேல் அடித்து இருக்கிறார்கள்.
இதுபோன்று தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை ஐம்பது ரன்களுக்கு மேல் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்திருக்கிறார்.
SENA நாடுகளில் சச்சின் 74 முறை சர்வதேச கிரிக்கெட்டில் 50 ரன்கள் அடித்துள்ள நிலையில் தற்போது விராட் கோலி அதனை சமன் செய்துள்ளார். பெர்த் டெஸ்ட் போட்டியில் தற்போது இந்திய அணி 44 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் கூடுதலாக இன்னும் நூறு ரன்களுக்கு மேல் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.