சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே விராட் கோலி மாஸ் கம்பேக் கொடுக்க வாய்ப்புகள் இருப்பதாக முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக 3 சதங்கள் மட்டுமே விராட் கோலி விளாசி இருக்கிறார் என்பதை நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தியா ஏ அணியுடன் இணைந்து இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இதனிடையே விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் விவாதமாகி உள்ளது.

ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளில் விராட் கோலி மொத்தமாக 3 சதங்களை மட்டுமே விளாசியுள்ளார். அதிலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 6 இன்னிங்ஸில் விராட் கோலி வெறும் 93 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலி எப்படி தாக்கு பிடிப்பார் என்று பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசுகையில், விராட் கோலி கடந்த 5 ஆண்டுகளில் 3 சதங்கள் மட்டுமே விளாசி இருக்கிறார் என்ற தகவலை சில நாட்களுக்கு முன்பாகவே பார்த்தேன். அது எனக்கு சரியாகப்படவில்லை. இந்த தகவல் உண்மையாக இருந்தால், நிச்சயம் அது மிகப்பெரிய சிக்கல் தான்.
விராட் கோலியை தவிர்த்து வேறு எந்த வீரரும் சர்வதேச கிரிக்கெட்டில் இப்படியான ஒரு ஃபார்முடன் தாக்கு பிடித்திருக்க முடியாது. அதேபோல் விராட் கோலி இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. நிச்சயம் அவர் மிகச்சிறந்த வீரர். அதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுவதை விராட் கோலி அதிகம் விரும்புவார்.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒருவேளை விராட் கோலி கம்பேக் கொடுக்க நினைத்தால், அதற்கு இந்த டெஸ்ட் தொடர் மட்டுமே கடைசி வாய்ப்பு என்று நினைக்கிறேன். அதேபோல் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியிலேயே மிகச்சிறப்பாக ஆடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் தோல்வியடையும் என்று எதிர்பார்க்கவே இல்லை. நியூசிலாந்து அணியில் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் கூட இல்லை. ஆசிய மண்ணில் கேன் வில்லியம்சன் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.