மெல்போர்ன்: மெல்போர்ன் மைதானத்தை பவுலர்கள் தன்னை நோக்கி வரும் வரை விராட் கோலி காத்திருக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் அறிவுறுத்தியுள்ளார். சிறிது நேரம் களத்தில் நேரம் செலவிட விராட் கோலி முயற்சிக்க வேண்டும் என்று கூறிய அவர், அதிக பந்துகளை எதிர்கொண்டாலே எளிதாக பெரிய ஸ்கோரை விளாச முடியும் என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரும் 26ஆம் தேதி விளையாடுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலே இந்திய அணியால் எளிதாக பார்டர் கவாஸ்கர் டிராபியை ரீடெய்ன் செய்ய முடியும். இதனால் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மெல்போர்ன் மைதானத்தை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களுக்கு உதவி கிடைக்கும்.

பொறுமையாக விளையாடும் வீரர்களால் எளிதாக சதங்களை விளாச முடியும். இந்த டெஸ்ட் தொடரை பொறுத்தவரை இந்திய அணி ஒரேயொரு இன்னிங்ஸில் மட்டுமே சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறது. மற்ற 5 இன்னிங்ஸ்களிலும் இந்திய அணியின் பேட்டிங் சுமாருக்கும் கீழாகவே சென்றது. இதற்கு இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே காரணமாக அமைந்தது.
குறிப்பாக பெர்த் டெஸ்ட் போட்டியில் அபார சதமடித்த விராட் கோலி, அதன்பின் ஆடிய 3 இன்னிங்ஸ்களிலும் பெரிதாக சோபிக்கவில்லை. அதிலும் அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்துகளுக்கு மீண்டும் மீண்டும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறி வருகிறார். இதற்கு விராட் கோலி தனது பேட்டிங்கில் தீர்வு காண வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் பேசுகையில், சில நேரங்களில் ஒரு பேட்ஸ்மேனாக இருந்தாலும், கொஞ்சம் களத்தில் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். இந்த ஆட்டத்திற்கு நம்மை ஒப்புக் கொடுக்கும் பட்சத்தில், எளிதாக களத்தில் சிறிது நேரத்தை செலவிட முடியும். நாம் பந்தை தேடி செல்லாமல், பவுலர் நம் பக்கம் திரும்புவதற்காக காத்திருக்க வேண்டும். அதுதான் பெரிய வீரர்களுக்கான அடையாளம்.
எவ்வளவு பந்துகளை எதிர்கொள்ள முடியுமோ, அவ்வளவு பந்துகளை விளையாட வேண்டும். அதேபோல் கால்களில் வீசப்படும் பந்துகளில் ரன்களை சேர்க்க வேண்டும். அவர் ஒன்றும் ரன்களே சேர்க்காமல் இல்லை. 3 இன்னிங்ஸ்களுக்கு முன்பாக தான் அற்புதமான சதத்தை விளாசி இருக்கிறார். ஏற்கனவே மெல்போர்ன் மைதானத்தில் அற்புதமான ஆட்டத்தை ஆடிய விராட் கோலியால், மீண்டும் அதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் மைதானத்தில் விராட் கோலி இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் ஒரு சதம் உட்பட 316 ரன்களை விளாசி இருக்கிறார். அதேபோல் ஒயிட் பால் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தனியாளாக நின்று 53 பந்துகளில் 82 ரன்களை விளாசியதும் குறிப்பிடத்தக்கது.